பாகிஸ்தான் ராணுவத்தில் சீனாவின் புதிய ஆயுதமேந்திய ட்ரோன்கள்... எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்
இஸ்லாமாபாத்: சீன அரசு 50 அதிநவீன ஆயுதமேந்திய ட்ரோன்களை பாகிஸ்தானுக்கு விற்றுள்ளதாகச் சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
விங் லூங் II எனப்படும் இந்த அதிநவீன டிரோன்களை பாகிஸ்தானுக்கு விற்கும் முடிவு இம்மாத தொடக்கத்தில் எடுக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த நவீன டிரோன்களுக்கு பதிலடி கொடுக்கும் திறன் இந்திய ராணுவத்திற்கு தற்போது இல்லை என்றும் சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவால் ட்ரோன் தாக்குதலைச் சமாளிக்க முடியாது
லிபியா, சிரியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளில் ஏற்பட்ட மோதல்களின்போது ஆயுதமேந்திய சீன மற்றும் துருக்கி நாடுகளின் ட்ரோன்களை கொண்டு எதிரிகளின் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டிச் சென்று தாக்குதல் நடத்த முடிந்ததாகவும் இந்திய ராணுவத்தால் அதிகளவிலான ட்ரோன்களின் தாக்குதலைத் சமாளிக்க முடியாது என்றும் சீனா தெரிவித்துள்ளது.
இந்திய எல்லைகளில் நிலைமை வேறு
சீனாவின் இந்த ட்ரோன்கள் குறித்து முன்னாள் விமானப் படைத் தலைவர் ஒருவர் கூறுகையில், "ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் சரியாகக் கண்காணிக்கப்படாமல் இருக்கும் வான்வெளிகளில் விங் லூங் II ட்ரோன்கள் வெற்றிகரமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்திய எல்லைகளில் நிலைமை இவ்வாறு இருக்காது.
சுட்டு வீழ்த்தப்படும்
சீன எல்லையாக இருந்தாலும் சரி பாகிஸ்தான் எல்லையாக இருந்தாலும் சரி, ரேடார்கள் மூலம் வான்வெளி தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. மேலும், விமானப் படையினரும் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர், ஆயுதமேந்திய ட்ரோன்கள், அது யாருடையதாக இருந்தாலும் சரி, அவை சுட்டு வீழ்த்தப்படும்" என்றார்.
இந்திய ராணுவத்திற்கு ட்ரோன்கள் தேவை
ஆனாலும்கூட, சீனாவிலிருந்து ஆயுதமேந்திய ட்ரோன்களை பாகிஸ்தான் வாங்கியுள்ளது, ஆயுதம் ஏந்திய ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை இந்தியா வாங்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டுகிறது. ஏனெனில் இந்த ட்ரோன்கள் மூலம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்த முடியும்.
தற்போது இல்லை
தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவிடம் எந்தவொரு ஆயுதமேந்திய ட்ரோன்களும் இல்லை. இந்திய கடற்கரை சார்பில் ரோந்து பணிகளை மேற்கொள்ள இரண்டு அமெரிக்க ட்ரோன்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல நம்மிடம் இருக்கும் ஹெரான் ட்ரோனின் ஆயுத மயமாக்கலுக்கு இன்னும் அதிக காலம் நாம் பொறுத்திருக்க வேண்டும்.
ரஷ்ய எஸ் -400 சிஸ்டம்
நமது ராணுவத்தில் ட்ரோன்களை சமாளித்து எதிர் தாக்குதல் நடத்தும் ஆயுதங்கள் இருக்க வேண்டிய அவசியத்தைப் புரிந்து வைத்துள்ள இந்திய ராணுவம், 2015 இல் எதிரி விமானங்களைக் கண்டறிந்து அழிக்கும் ஆயுதங்களுக்கான டெண்டரை வெளியிட்டது. இதன் மூலம் ரஷ்ய எஸ் -400 சிஸ்டம் நமக்கு அடுத்த ஆண்டு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரத் எலெக்ட்ரானிக்ஸின் அதிநவீன ரேடார்
அதே நேரம், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் தயாரித்த நடுத்தர ஆற்றல் கொண்ட ரேடாரை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் வானில் பறக்கும் பறவைகளைக் கூட கண்டறிய முடியும். இருப்பினும், இந்த ரேடாருக்கான அனுமதி பெறும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. எதிரிகளின் ஆயுதமேந்திய ட்ரோன்களை இதை வைத்துக்கொண்டு கண்டறிந்து, பின்னர் சுட்டு வீழ்த்துவதே இந்தியாவின் தற்போதைய திட்டமாக உள்ளது.