எம்மாடியோவ்!.. 324 பெட்டிகள்.. 4 கி.மீ நீளம்.. பிரம்மிப்பூட்டிய புதிய சரக்கு ரயில்.. எங்கு தெரியுமா?
பீஜிங்: சாதாரணமாக 50 பெட்டிகளை கொண்ட சரக்கு ரயிலை பார்த்தாலே ஒரு நிமிடம் நமக்கு எல்லாம் தலை சுற்றிவிடும். ஆனால், 324 பெட்டிகளுடன் 4 கி.மீ நீளமுள்ள சரக்கு ரயில் ஒன்று சோதனை ஓட்டத்தை நிறைவு செய்து இருக்கிறது. எந்த நாட்டில் இவ்வளவு நீளமான ரயில் ஓடபோகிறது என்பது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள சரக்கு ரயில்களில் சராசரியாக 52 பெட்டிகள் வரை இருக்கும். இவற்றின் நீளம் கிட்டத்தட்ட 650 மீட்டர் வரை உள்ளன. அதாவது அரை கிலோமீட்டருக்கும் மேலாக உள்ளது. இந்தியாவில் உள்ள ரயிலோடு ஒப்பிடும் போது சீனா சோதனை ஓட்டம் நடத்தியிருக்கும் இந்த ரயில் 6 மடங்கு அதிகமாக உள்ளது.

சாதாரணமாக நம்ம ஊரில் சரக்கு ரயில்கள் போகும் போதே அதன் நீளத்தை பிரம்மிப்புடன் பயணிகள் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அப்படி இருக்கும் போது 324 பெட்டிகளை கொண்ட ரயில் என்றவுடன் கேட்டதுமே தலைசுற்றாத குறைதான் என்கிறார்கள் நெட்டிசன்கள்.. சீனாவின் நீளமான இந்த சரக்கு ரயில் குறித்த பதிவுகள் இணையத்திலும் டிரெண்ட் ஆகி வருகிறது.
சரக்கு ரயில்: அமெரிக்க உள்ளிட்ட நாடுகளிலும் இதற்கு இணையான பெட்டிகளுடன் ரயில்கள் இருப்பதாகவும் நெட்டிசன்கள் சிலர் விக்கிப்பீடியா தகவல்களை மேற்கோள் காட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். உலக அளவில் அமெரிக்காவுக்கு இணையாக பல்வேறு துறைகளிலும் போட்டி போடும் நாடுகளில் ஒன்றாக உள்ளது சீனா.
செயற்கை நிலா: தகவல் தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி என எதையடுத்தாலும் தனது அசாத்திய கண்டுபிடிப்புகளால் வியக்க வைத்து வருகிறது. செயற்கை நிலாவை உருவாக்கும் முயற்சி முதல் கொண்டு பயோ ஆயுதம் என பல்வேறு ஆராய்ச்சிகளையும் சீனா மேற்கொண்டு வருகிறது. இரும்புத்திரை போட்டுக்கொண்டு ரகசியமாக சீனா பல பயங்கரமான ஆய்வுகளை நடத்துவதாகவும் சர்வதேச வல்லுனர்கள் கவலை தெரிவிக்காமல் இல்லை.
4 கி.மீ நீளம்: சீனாவின் பல்வேறு புதிய முயற்சிகளுக்கு மத்தியில் தற்போது 4 கி.மீட்டர் தொலைவிற்கு சரக்கு ரயில் ஒன்றை சோதனை செய்து பார்த்து இருக்கிறது அந்த நாடு.. ஆமாங்க இது உண்மைதான்.. இந்த ரயில்களில் பெட்டிகள் மட்டும் 324 உள்ளதாம். 32,400 டன்கள் எடைகளை இந்த ரயில் இழுத்து செல்லும்.
மின்சாரத்தில் இயங்கும் இந்த ரயில், சீனாவில் உள்ள ஷாங்சி மாகாணத்தில் உள்ள நிலக்கரி தளத்தையும், ஹெபே மாகாணத்தில் உள்ள ஹுவாங்குவா துறைமுகத்தையும் இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது. நிலக்கரியை துறைமுகத்திற்கு எளிதாக கொண்டு சேர்க்கும் வகையில், இந்த பிரமாண்ட ரயிலை சீனா இயக்க திட்டமிட்டுள்ளது.
4 மின்சார ரயில் என்ஜின்கள்: இந்த ரயிலின் மூலம் அதிக அளவு நிலக்கரி சப்ளை செய்ய முடியும் என்றும் இதன் மூலம் நேரம் மிச்சமாவதோடு பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும் என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளார்களாம். இவ்வளவு பெரிய ரயிலை இழுத்து செல்ல நான்கு மின்சார ரயில் என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரயிலின் சோதனை ஓட்டத்தை சீனா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.












Click it and Unblock the Notifications