Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தைவான் நாட்டை.. செயற்கை பேரழிவு உருவாக்கி, சின்னாபின்னமாக்க சீனா திட்டம்! அம்பலப்படுத்திய ராணுவ இதழ்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: தைவானை எப்படியாவது தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட வேண்டும் என்று சீனா தொடர்ந்து கூறி வருகிறது. நேரம் வரும்போது தைவானை ஆக்கிரமிக்க சீனா தயங்காது என்றும் நம்பப்படுகிறது. இந்நிலையில், சீனாவின் ராணுவ இதழான 'நேவல் அண்ட் மெர்ச்சன்ட் ஷிப்ஸ்' வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கட்டுரையின்படி, தைவானின் முக்கியமான கட்டமைப்புகளை அழித்து, நாட்டை நிலைகுலையச் செய்து கைப்பற்ற சீனா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சீனாவைச் சேர்ந்த சிந்தனைக் குழுவின் கட்டுரை ஒன்றில், தைவானின் அமைப்புகளுக்குள் ஊடுருவி, எதிர்ப்பே இல்லாமல் சரணடையும் அளவுக்கு அந்நாட்டை பலவீனப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 30 முதல் 40 வரையிலான மிக முக்கியமான இலக்குகளைப் பட்டியலிட்டுள்ள கட்டுரை, சரியான நேரத்தில் இந்த இலக்குகளைத் தாக்கினால் தைவானின் அத்தியாவசிய கட்டமைப்புகள் முழுமையாக அழிக்கப்படும் என்று கூறுகிறது. சமீபத்தில் சீன ராணுவம் (PLA) பயிற்சி மேற்கொண்ட திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LNG) நிலையங்களும் இந்த இலக்குகளில் அடங்கும்.

Taiwan China

ராணுவ இதழ் சொல்வது என்ன?

சவுத் சீனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியின்படி, சீன இதழின் மே மாத இதழில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "அமைப்புகள் சரிந்தால், தைவானின் சுதந்திர இராணுவத்தின் எதிர்ப்பை விரைவில் இழந்து, போரில்லாமல் வெற்றி பெறும் சூழ்நிலை உருவாகும். தைவான் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான குறைந்த செலவு மற்றும் அதிக செயல்திறன் கொண்ட இராணுவ விருப்பமாக இது இருக்கலாம்." கட்டுரையில் மேலும், மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் பல நாட்களுக்கு தடைபடலாம் என்றும், இதனால் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிக்கலாம் என்றும், தகவல் தொடர்பு மற்றும் இணைய சேவைகள் பாதிக்கப்படலாம் என்றும், மருத்துவ சேவைகளில் இடையூறு ஏற்படலாம் என்றும், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

சூன் ட்சுவின் 'தி ஆர்ட் ஆஃப் வார்' என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டி, நகரங்களின் கட்டமைப்பை முழுமையாக அழிக்கும் உத்தி குறைந்த ராணுவ செலவில் அதிகபட்ச பலனைத் தரக்கூடும் என்றும், இது போரே இல்லாமல் எதிரியை தோற்கடிப்பதற்கான சிறந்த வழி என்றும் கட்டுரை கூறுகிறது.

தைவான் எரிசக்தி மற்றும் பொருட்களுக்காக இறக்குமதியை நம்பியுள்ள ஒரு தீவு என்றும், தொடர்ந்து பூகம்பங்கள் மற்றும் புயல்கள் போன்ற இயற்கை பேரழிவுகளை சந்தித்து வருவதால், இத்தகைய உத்திக்கு அது சரியான இலக்கு என்றும் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

Taiwan China

சீன ராணுவம் தாக்குதல் பயிற்சி

சீன இதழில் கூறப்பட்டுள்ள உத்தி சீனாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், ஏப்ரல் மாதத்தில் தைவானுக்கு அருகே PLA நடத்திய பெரிய அளவிலான பயிற்சியில், தைவானின் மிகப்பெரிய LNG கிடங்கின் மாதிரியான ஒரு போலி கிடங்கில் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையின்படி, தைவானின் மின்சார அமைப்பில் 78 சதவீத மின்சாரம் அனல் மின் நிலையங்களில் இருந்து வருகிறது. தைவான் 11 சதவீத மின்சாரத்தை அணு ஆற்றலில் இருந்து பெறுகிறது. ஆனால் அதன் எரிபொருள் தேவையில் 98 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. மின்சாரம் தைவானின் கட்டமைப்பு நெட்வொர்க்கின் முதுகெலும்பாக இருப்பதால், அது இறக்குமதியை முழுமையாக நம்பியிருப்பதால், அதை இலக்கு வைப்பது எளிதாகிவிடும் என்று கட்டுரை கூறுகிறது.

ஏப்ரலில், சீன ராணுவம் 'ஸ்ட்ரெயிட் தண்டர் 2025A' என்ற ராணுவப் பயிற்சியின் போது, தைவானின் மிகப்பெரிய LNG முனையத்தின் போலி இலக்கில் நீண்ட தூர ஏவுகணைகளை ஏவியது இந்த கட்டுரையுடன் இணைத்து பார்க்கும்போது, சர்வதேச சமூகத்தை, பல கணக்குகளை போட வைக்கிறது.

தீவின் முக்கியமான உள் கட்டமைப்புகளில் 15 மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் 10 தகவல் தொடர்பு நிலையங்கள் அடங்கும் என்றும், மீதமுள்ளவை போக்குவரத்து மற்றும் நீர் விநியோக அமைப்புகளின் கட்டமைப்புகள் என்றும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இலக்குகளில் 60 சதவீதம் வடக்கு தைவானில் அமைந்துள்ளன, இதனால் அவற்றை வியூக ரீதியாக தாக்குவது எளிதாக இருக்கும் என்று கட்டுரை கூறுகிறது.

மேலும், தைவானின் எரிசக்தி கட்டமைப்பை அழிப்பது குறித்த முழு விவரங்களையும் அந்த கட்டுரை வழங்குகிறது. அதில், "மூன்று முக்கிய துணை மின் நிலையங்கள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டால், வடக்கு தைவானில் முழுமையான மின்வெட்டு ஏற்படுவதற்கான வாய்ப்பு 99.7 சதவீதம் உள்ளது. மின்வெட்டு நீண்ட நேரம் நீடித்தால், மற்ற உள்கட்டமைப்பு அமைப்புகள் 40 சதவீதம் வேகமாக சேதமடையக்கூடும்" என்று கட்டுரை கூறுகிறது.

செயற்கை பேரழிவுகளை உருவாக்க சீனா திட்டம்?

புயல் அல்லது தேர்தல் போன்ற காலகட்டங்களில் தைவானை சீனாவுடன் இணைக்கும் இந்த உத்தியை செயல்படுத்தலாம் என்று கட்டுரை பரிந்துரைக்கிறது. குறிப்பாக, புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதற்கும் புயல் வருவதற்கும் இடைப்பட்ட மதிய நேரத்தில் தாக்குதல் நடத்துவது சிறந்த நேரமாக இருக்கும் என்று கட்டுரை கூறுகிறது.

மேலும், மின்சார கேபிள்களை சேதப்படுத்த செயற்கை நிலச்சரிவுகளை உருவாக்குவது போன்ற சிறப்பு ஆயுதங்களைப் பயன்படுத்தி சீனா போலி இயற்கை பேரழிவுகளை உருவாக்கவும் முடியும் என்றும் கட்டுரை கூறுகிறது.

தைவானை தனது பகுதியாக சீனா கூறுகிறது

தைவானை சீனா தனது பகுதியாக கருதுகிறது மற்றும் எதிர்காலத்தில் தைவான் சீனாவின் ஒரு பகுதியாக மாறும் என்று நம்புகிறது. இருப்பினும், தைவான் இதை எதிர்த்து வருகிறது.

சீன ராணுவம் தைவான் மற்றும் தைவான் ஜலசந்தியின் அருகே தனது ராணுவ நிலையை வலுப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தைவானை கட்டாயமாக இணைப்பது குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.

தைவானின் முக்கிய சர்வதேச கூட்டாளி அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகள் இந்த தீவை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதில்லை. இருப்பினும், தற்காப்புக்காக தைவானுக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறது அமெரிக்கா.

Taiwan China

நெதர்லாந்தின் காலனியாக இருந்தது தைவான்

சீனா மற்றும் தைவானின் வரலாற்றைப் பொறுத்தவரை, தைவான் ஒரு காலத்தில் நெதர்லாந்தின் காலனியாக இருந்தது. 1642 முதல் 1661 வரை அது நெதர்லாந்தின் ஆட்சியின் கீழ் இருந்தது. பின்னர் 1683 முதல் 1895 வரை சீனாவின், சிங் வம்சம் தைவானை ஆட்சி செய்தது.

1895 இல், சீனா, ஜப்பானிடம் தோல்வியடைந்தது. வெற்றியின் பின்னர், ஜப்பான், தைவானை தனது பகுதியாகக் கூறி ஆட்சி செய்யத் தொடங்கியது. ஆனால் இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனிடம் ஜப்பான் தோல்வியடைந்த பின்னர், தைவான் அதன் கையை விட்டுப் போனது.

அமெரிக்காவும் பிரிட்டனும் தைவானை தாங்களே ஆட்சி செய்வதற்குப் பதிலாக, சீனாவின் கிளர்ச்சி அரசியல்வாதியும், ராணுவத் தளபதியுமான சியாங் கை ஷேக்கிடம் ஒப்படைத்தனர். சியாங் கை ஷேக் அந்த நேரத்தில் சீனாவின் ஒரு பெரிய பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால் சிறிது காலத்திற்குப் பின்னர் அவர் சீனாவின் கம்யூனிஸ்ட் ராணுவத்திடம் தோல்வியடைந்தார்.

தோல்விக்குப் பின்னர், சியாங் சீனாவிலிருந்து தப்பி தைவானுக்கு வந்து நீண்ட காலம் ஆட்சி செய்தார். 1980 களில் சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான உறவுகள் மேம்படத் தொடங்கின. ஆனால் பின்னர் சீனா, தைவானை தன்னுடன் இணைக்க முன்மொழிந்தது, அதை தைவான் நிராகரித்தது.

அதன் பின்னர், சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான உறவுகள் பதட்டமாகவே உள்ளன. சீனா பலவந்தமாக தைவானை ஆக்கிரமிக்கக்கூடும் என்ற அச்சுறுத்தல் அடிக்கடி நிலவுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+