விண்வெளியிலேயே விவசாயம்.. கீரை, தக்காளி, வெங்காயம் அறுவடை செய்து வாய்பிளக்க வைத்த சீனா! ஹே எப்புட்றா
பெய்ஜிங்: சீனாவின் ஷென்சோ-16 விண்வெளி திட்டத்தின் மூலம் விண்வெளியில் அந்நாட்டு வீரர்கள் கீரை, சின்ன வெங்காயம், செர்சி தக்காளியை விளைவித்து அறுவடை செய்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
ஒவ்வொரு நாடும் விண்வெளி ஆய்வுகளில் அதிக ஆர்வம் காட்டுகிறது. தற்போதைய நிலையில் விண்வெளி துறை தொடர்பான ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா முன்னிலையில் உள்ளன. இதுதவிர பிற நாடுகளும் கிரக ஆய்வில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.

குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், கனடா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் கூட்டு முயற்சியால் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச விண்வெளி மையம் என்பது பூமியில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் லோவர் புவி சுற்றுவட்டபாதையில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து அந்த நாடுகளின் வீரர்களின் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சீனா தனக்கென்று தனியாக விண்வெளியில் டியாங்காங் விண்வெளி மையத்தை அமைத்துள்ளது. இந்நிலையில் தான் மே மாதம் 30ம் தேதி ஜியுகுவான் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து ஷென்சோ-16 விண்கலம் விண்ணில் பாய்ந்தது. இதில் மொத்தம் 3 பேர் பயணம் செய்தனர்.
விண்வெளி வீரர்களான ஜிங் ஹைபெங், ஜு யாங்சு மற்றும் சீனா ஏரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான குய் ஹைச்சாவோ ஆகியோர் விண்கலத்தில் பயணித்தனர். இவர்கள் விண்வெளியில் சீனா புதிதாக அமைத்துள்ள டியாங்காங் விண்வெளி நிலையத்தை அடைந்தனர். அங்கு அவர்கள் புதிய காய்கறிகளை பயிரிட்டனர்.
அதாவது விண்வெளி மையத்திலேயே அவர்கள் கீரை, சின்ன வெங்காயம், செர்ரி தக்காளி செடிகளை வளர்க்க தொடங்கினர். பூமியில் தேவையான சூரியவெளிச்சம், தண்ணீர் இருப்பதால் செடிகள் எளிதில் வளரும். ஆனால் விண்வெளி மையத்தில் செடிகள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இதனால் சிறப்பு ஏற்பாடுகளை சீனா செய்திருந்தது.
அதாவது செடிகளை பயிரிடுவதற்கான சிறப்பு சாதனத்தை சீனா உருவாக்கியது. இது தாவரங்கள் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. தாவர வளர்ச்சிக்கு தேவையான வெப்பநிலை, ஈரப்பதம், ஆக்சிஜன், கார்பன் டை-ஆக்சைடு உள்ளிட்டவை சரியான அளவில் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. இதில் தான் தற்போது சீனா விண்வெளி வீரர்கள் செடிகளை பயிரிட்டு வெற்றி கண்டுள்ளனர்.
அதன்படி அவர்கள் பயிரிட்ட கீரை, செர்ரி தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவை நன்கு வளர்ந்துள்ளது. இதையடுத்து அவர்கள் அறுவடை செய்துள்ளனர். இந்த குழுவினர் விண்வெளியில் ஆய்வை முடித்துவிட்டு அடுத்த மாதம் பூமிக்கு வர உள்ளனர். முன்னதாக விண்வெளியில் காய்கறி செடிகளை வளர்த்து அறுவடை செய்யும் முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி வீரர்கள் சாதனை படைத்து இருந்ததனர்.
பொதுவாக விண்வெளிக்கு தற்போது அதிகளவில் ஆய்வுக்கலன்கள் தான் செல்கின்றன. வரும் காலத்தில் மனிதர்களை அதிகமாக அனுப்ப இந்தியா உள்பட பல நாடுகள் திட்டமிட்டு பணியாற்றி வருகின்றன. இவர்களுக்கு விண்வெளியில் உணவு என்பது மிகவும் முக்கியமானதாகும். இவர்கள் பூமியில் இருந்து உணவுகளை கொண்டு செல்வதை விட அங்கேயே காய்கறிகளை உற்பத்தி செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இதனை மனதில் வைத்து தான் விண்வெளியில் செடிகள் வளர்க்கும் திட்டங்களை உலக நாடுகள் முன்னெடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications