மனவளர்ச்சி குன்றிய மகனை 40 ஆண்டுகள் கூண்டில் அடைத்து வளர்த்த சீனத் தாய்
பீஜிங்: மனவளர்ச்சி குன்றிய தனது 48 வயது மகனை, கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கூண்டில் அடைத்து வளர்த்து வந்துள்ளார் சீனத் தாய் ஒருவர். தற்போது தனது மரணத்திற்குப் பின் தனது மகனுக்கு தகுந்த பாதுகாப்புத் தேவை என கருதி மற்றவர்கள் உதவியை எதிர்பார்த்ததன் மூலம் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஐந்தறிவு படைத்த விலங்குகளையே கூண்டில் அடைத்து வளர்ப்பது தவறு என மிருகவதைத் தடுப்பு ஆர்வலர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், தனது 48 வயது மகணை கூண்டில் அடைத்து தாயே வளர்த்து வந்துள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
அதுவும், ஒன்று, இரண்டு ஆண்டுகளல்ல... 40 ஆண்டுகள் கூண்டிற்குள் கழித்துள்ளார் அந்த 48 வயது மகன்.
மனவளர்ச்சி....
சீனாவின், மத்திய ஹெனான் பகுதியில் உள்ள ஷென்சோ பகுதியைச் சேர்ந்தவர் பென்ங் வீகிங் என்ற 48 வயது மனிதர். மனவளர்ச்சி குன்றிய இவர் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை கூண்டிற்குள்ளேயே கழித்துள்ளார்.
40 ஆண்டுகள்....
கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் சிறிய இரும்புக் கூட்டிலேயே கழித்திருக்கிறார் இவர். இதற்குக் காரணம் இவரது பெற்றோர் தான். இவரது தந்தை தற்போது உயிரோடு இல்லை. ஆனால், 80 வயது தாயார் பெங்க் வாய்மீ தான் இவரைக் கவனித்து வருகிறார்.
இரும்புக் கூண்டு...
மகனின் பாதுகாப்பிற்காகவே அவனை கூண்டில் அடைத்து வைத்து வளர்த்தோம் எனத் தெரிவித்துள்ளார் அவனது தாயார். வயதான தனக்குப் பிறகு தனது மகனைப் பார்த்துக் கொள்வதற்கு வேறு சரியான ஆள் தேடியபோது இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காய்ச்சல் காரணமாக...
இது குறித்து பெங்க் வாய்மீ கூறுகையில், ‘ அவனது 6ம் வயதில் அவனுக்கு ஏற்பட்ட தீவிர காய்ச்சலின் விளைவாக அவனது மூளை பாதிப்படைந்தது. அதனைத் தொடர்ந்து அவனது மனநிலைப் பாதிக்கப் பட்டது.
தன்னைத் தானே தாக்கி...
வீகிங்கைப் பாதுகாப்பதற்காகவே அவனுக்கு இப்படி ஒரு கூண்டினை வடிவமைத்தார் அவனது தந்தை. காரணம், அவன் சுதந்திரமாக வெளியில் உலாவியபோது கத்தி போன்றப் பொருட்களால் தன்னைத் தான் தாக்கத் தொடங்கினான்.
பாதுகாப்பதற்காக...
பல சமயங்களில் நடக்கத் தெரியாமல் கீழே விழுந்ததில் அவனது முகத்தில் காயம் ஏற்பட்டது. எனவே, இது போன்ற அசம்பாவிதங்களில் இருந்து அவனைக் காப்பதற்காகவே, இத்தகைய இரும்புக் கூண்டு ஒன்றை வடிவமைத்தார் எனது கணவர்' எனத் தெரிவித்துள்ளார்.