அமெரிக்காவின் தாளத்துக்கு ஆடும் தைவான்! சினம் கொண்டு சீறும் சீனா.. சிக்கலில் இந்தியா!
தைபே: அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களை தைவான் இறக்குமதி செய்திருக்கும் நிலையில், இன்று காலை அந்நாட்டின் வான் எல்லையை ஒட்டிய பகுதிகளில், சீனா தனது போர் விமானங்களை பறக்க வைத்திருக்கிறது. மட்டுமல்லாது கடல் எல்லையையும் சீனாவின் கடற்படை கப்பல்கள் மீறியுள்ளன. இது கிழக்கு ஆசியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனை போலவே, தற்போது தைவானையும் அமெரிக்கா ஆட்டிப்படைக்க தொடங்கியுள்ளது. சீனாவிலிருந்து வெறும் 130 கி.மீ தொலைவில்தான் தைவான் எனும் தீவு இருக்கிறது. தொடக்கில் இது சீனாவின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் பின்னாட்களில் தைவான் ஆட்சியாளர்கள் அமெரிக்கவுடன் நெருக்கம் காட்டினர். விளைவு, தனிநாடு கோரிக்கை மேலெழுந்தது. தைவான் மக்கள் பேசுவது சீன மொழி, அவர்களின் பண்பாட்டு கலாச்சாரமும் சீனாவுடையதுதான். இப்படி எந்த வகையிலும் வித்தியாசம் இல்லை என்றாலும், வீம்புக்கு தனிநாடு கோரிக்கையை அந்நாட்டு ஆட்சியாளர்கள் உயர்த்தி பிடித்துக்கொண்டிருக்கின்றனர்.

இதற்கு பின்னால் அமெரிக்காவின் சதி இருப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில், அமெரிக்காவிடமிருந்து தைவான் தொடர்ந்து ஆயுதங்களை வாங்கி வருகிறது. வாங்கிய ஆயுதங்களை கொண்டு பயிற்சியும் மேற்கொண்டு வருகிறது. இது தங்களின் இறையான்மைக்கு எதிராக இருப்பதாக சீனா கருதுகிறது. எனவே, சீனாவும் பதிலுக்கு தனது ராணுவ பலத்தை காட்டி வருகிறது.
இன்று காலை மட்டும் சுமார் 20 சீன போர் விமானங்கள் தைவான் வான் எல்லைக்குள் நுழைந்திருக்கின்றன. அதேபோல 8 சீன போர் கப்பலும் கடல் வழியாக எல்லையை கடந்து இருக்கிறது. இதை தைவான் ராணுவம் உறுதி செய்திருக்கிறது. இது குறித்து தைவான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று காலை 6 மணி வரை இந்த ஊடுருவல்கள் நடந்திருக்கின்றன. தைவானின் மத்திய மற்றும் தென்மேற்கு பாதுகாப்பு அடையாள வான் பகுதிக்குள் நுழைந்தன. நாங்கள் நிலைமையை கண்காணித்து அதற்கேற்ப பதிலளிப்போம்" என்று கூறியுள்ளது.
சீனாவின் ஊடுருவலாலும் தைவான் ராணுவத்தின் இந்த அறிக்கையாலும் தற்போது கிழக்கு ஆசியா கடும் பதற்றத்தில் உள்ளது. இந்த மோதல் 'தைவான் ஜலசந்தியை' யார் வசப்படுத்துவது என்பதை நோக்கி நகர்வதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தைவான் ஜலசந்தி பாதையானது மிகவும் முக்கியமாகும்.
தற்போது உள்ள பஞ்சாயத்து காரணமாக இந்த பாதை முடக்கப்பட்டால் அது இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக ஜப்பான், தென் கொரியா மற்றும் ரஷ்யாவிலிருந்து கடல் வழியாக வரும் பொருட்கள் எல்லாம், இந்த பாதையைதான் பயன்படுத்துகின்றன. இதில் தடை ஏற்பட்டால், இந்த வழியாக வரும் பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரிக்கும். இந்தியா தற்போது ரஷ்யாவிடமிருந்துதான் அதிக அளவில் கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. அதுவும் இந்த பாதையில்தான் இந்தியாவுக்கு வந்து சேர்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
இவ்வளவு பஞ்சாயத்துகள் இருக்கும் நிலையில்தான், இரு நாடுகளுக்கு இடையே இப்போது ராணுவ ரீதியிலான உரசல்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதில் தைவானுக்கு அமெரிக்கா முழுக்க முழுக்க சப்போர்ட்டாக இருக்கிறது. உக்ரைனையும் இப்படி உசுப்பிட்டு இப்போது போரில் சிக்கவைத்திருப்பதும் அமெரிக்காதான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications