டெர்மினேட்டர் T-1000 ஞாபகம் இருக்கா? நிஜத்தில் "உருகும்" ரோபோவை உருவாக்கிய சீனா.. இதை பாருங்க!
கேலியம் உலோகம் மிக குறைந்த வெப்பநிலையில் உருகிவிடும். மனிதர்கள் கையில் தொட்டாலே இது உருகி பாதரசம் போல மாறிவிடும்
பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் சமீபத்தில் ஒரு வித்தியாசமான ரோபோவை உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோ 'டெர்மினேட்டர் -2' திரைப்படத்தில் வரும் 'T-1000' எனும் ரோபோவின் கதாபாத்திரத்தை போல தன்னுடைய அமைப்பை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளும் இயல்புடையதாகும்.
உலகம் முழுவதும் மட்டுமல்லாது உலகத்தை கடந்தும் ரோபோக்களின் தேவையானது நீடித்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு புதிய வகை ரோபோக்களுக்கும் எப்போதும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில், சீன விஞ்ஞானிகள் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர். இந்த ரோபோ நினைத்தால் தன்னுடைய உருவத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டதாகும். மேற்குறிப்பிட்டதை போல இந்த ரோபோ ஏறத்தாழ 'T-1000' கதாபாத்திரத்தை போல இருக்கிறது.
இந்த கதாபாத்திரம் முதன் முதலாக திரைக்கு வந்தபோது விஞ்ஞானிகளே சற்று குழம்பிபோனார்கள். இப்படி நடக்க வாய்ப்பில்லை என்று கூறினார்கள். ஆனால் சுமார் 30 ஆண்டுகள் கழித்து இதேபோன்ற ரோபோவை அவர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்கள். இது குறித்து 'சயின்ஸ் அலர்ட்' எனும் ஆய்விதழ் விரிவாக எழுதியிருக்கிறது. அதில் சீனாவின் சன் யாட்-சென் பல்கலைக்கழகத்தின் பொறியாளர் செங்ஃபெங் பான் கூறியுள்ளதாவது,
கடல் வெள்ளரி
"எங்களுக்கு இந்த ரோபோவை வடிவமைக்க முன்மாதிரியாக இருந்தது கடல் வெள்ளரிகள்தான். இந்த உயிரினம் தன்னுடைய வடிவத்தை சுருக்கி விரித்து விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளும். இதனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ரோபோக்கள் எலக்ட்ரானிக்ஸ் அசெம்பிளி மற்றும் மருத்துவ துறையில் அதிக அளவு பயன்படும். இவ்வாறு திட மற்றும் திரவ நிலைகளில் உள்ள ரோபோக்கள் அதிக செயல்திறனை கொண்டிருக்கும். மனிதர் நுழைய முடியாத இடங்களில் ஏதாவது ஒரு பொருளை விநியோகிக்க இதுபோன்ற ரோபோக்கள் பயன்படுத்தப்படும். ஆனால் இது அதிக நெகிழ்வு தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.
சவால்கள்
இவ்வாறு அதிக நெகிழ்வு தன்மை கொண்ட ரோபோக்களை கட்டுப்படுத்துவது சவாலான விஷயம். ஆனால் இந்த இரண்டு சிரமங்களையும் களைந்து புதிய ரோபோக்களை உருவாக்க வேண்டும் என்கிற முயற்சியில்தான் நாங்கள் இந்த ரோபோக்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த ரோபோக்கள் இன்னும் சிறப்பாக மேம்படுத்தப்பட்டால் அறுவை சிகிச்சை துறையில் முக்கிய பங்காற்றும். தொடக்கத்தில் இதனை உருவாக்க எங்களுக்கு நச்சற்ற ஒரு பொருள் தேவைப்பட்டது. அப்படி நாங்கள் தேடி கண்டுபிடித்ததுதாதன் 'கேலியம்'. கேலியம் மனிதனின் உடலில் மிக மிக சிறிய அளவு இருக்கிறது. நாம் அருந்தும் தண்ணீரில் தொடங்கி உண்ணும் தானியங்கள் வரை கேலியம் சிறிய அளவில் இருக்கிறது.
கேலியம்
எனவே இதனை கொண்டு நாங்கள் ரோபோக்களை செய்ய தொடங்கினோம். நாங்கள் எதிர்பார்த்தை போலவே இதன் தொடக்க ஆய்வு முடிவுகள் சிற்பாக வந்தன. அதாவது இந்த கேலயம் உருக வெறும் 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை போதுமானது. அதாவது நீங்கள் திட வடிவில் இருக்கும் கேலியத்தை கையில் எடுத்தாலே அரு உருகி பாதரசம் போல மாறிவிடும். இந்த உலோகத்தில் நாங்கள் காந்த துகள்களை கலந்து ஒரு பொம்மையை உருவாக்கினோம். பின்னர் அந்த பொம்மை ரோபோவை ஒரு சிறையில் அடைத்தோம். தற்போது கேலியம் திட வடிவில் இருப்பதால் சிறையிலிருந்து வெளியே வர முடியவில்லை.
ரோபோ
எனவே நாங்கள் காந்த தூண்டலை கொண்டு அதன் வெப்பநிலையை அதிகரித்தோம். உடனே ரோபோ உருகி சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டது. பின்னர் நாங்கள் அதனை மீண்டும் குளிர்வித்தோம். பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது. இந்த கண்டுபிடிப்பில் இன்னும் சிலவற்றை மேம்படுத்த வேண்டும். அவ்வாறு மேம்படுத்தினால் குழந்தைகள் தெரியமால் விழுங்கிய பேட்டரி, நாணயங்கள் போன்றவற்றை வெளியில் எடுக்க அறுவை சிகிச்சை தேவைப்படாது. இந்த ரோபோக்களை கொண்டே எடுத்துவிடலாம். இந்த ரோபோக்கள் ஊடுருவ ஒரு சிறிய ஸ்க்ரூ அளவிலான ஓட்டை போதுமானது. ஆனால் இது தவறான நோக்கத்திற்காகவும் பன்படுத்தப்படலாம். உதாரணமாக போதை பொருள் கடத்தல் போன்றவற்றிற்கு இது உதவலாம். எனவே இது குறித்து மேலும் அதிக ஆய்வு நடத்தப்பட வேண்டியுள்ளது" என்று கூறியுள்ளார்.