24*7 செய்தி சேனல்களின் முன்னோடி.. சிஎன்என் தொலைக்காட்சி நிறுவனர் டெட் டர்னர் காலமானார்!
வாஷிங்டன்: சிஎன்என் தொலைக்காட்சி சேனலைத் தொடங்கி, 24 மணி நேரச் செய்தி கலாச்சாரத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்த ஊடக நிறுவனர் டெட் டர்னர், தனது 87-வது வயதில் இன்று காலமானார். தொலைக்காட்சி செய்திகளில் புரட்சியை ஏற்படுத்தியவர் டெட் டர்னர். உலக ஊடகங்களின் போக்கையே மாற்றியமைத்த இவரது மறைவு, சர்வதேச ஊடகத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.
உலகெங்கிலும் 24 மணி நேர செய்தி ஒளிபரப்பு என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்திய முன்னோடியான இவர், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல அமைப்புகளுக்குப் பெரும் தொகையை நன்கொடையாக வழங்கிய மிகச்சிறந்த கொடையாளராகவும் மதிக்கப்படுகிறார்.

1980-ல், டெட் டர்னர் முதல் பிரத்யேக தொடர் செய்தி அலைவரிசையாக கேபிள் நியூஸ் நெட்வொர்க்கை (CNN) தொடங்கினார், அது விரைவில் ஊடக உலகின் ஒரு முக்கிய அங்கமாக மாறியது. சிஎன்என் ஆரம்பத்தில் பல போராட்டங்களை எதிர்கொண்டது. இந்த முயற்சி வெற்றி பெறாது என்று கருதியவர்களால் அதன் ஆரம்ப ஆண்டுகளில் 'சிக்கன் நூடுல் நெட்வொர்க்' என்று கேலி செய்யப்பட்டது.
ஆனால், 1981-ல் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் மீதான கொலை முயற்சி மற்றும் 1986-ல் நடந்த சேலஞ்சர் விண்வெளி ஓடப் பேரழிவு போன்ற செய்திகளை வேகமாகவும் தொடர்ச்சியாகவும் வழங்கி சி.என்.என் தொலைக்காட்சி அலைவரிசை தனது திறமையை நிரூபித்தது.
1990-1991 வளைகுடாப் போரின் போது ஈராக்கிலிருந்து வழங்கிய நேரடித் தொடர் ஒளிபரப்பின் மூலம் சி.என்.என் தொலைக்காட்சி நிறுவனம் பெரிய அளாவில் கவனம் பெற்றது. CNN-இன் வெற்றியைத் தொடர்ந்து, டர்னரின் நீண்டகாலப் போட்டியாளரான ரூபர்ட் முர்டோக், 1996-ல் ஃபாக்ஸ் நியூஸ் சேனலை தொடங்கினார். அதைத்தொடர்ந்து, பல 24*7 செய்தி அலைவரிசைகள் வந்தன.
அந்தவகையில், செய்தி சேனல்களுக்கு முன்னோடி சி.என்.என் தான். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் ஒருமுறை, சிஐஏ-விடமிருந்து கற்றுக்கொண்டதை விட சிஎன்என்-னிடமிருந்து அதிகம் கற்றுக்கொண்டதாகக் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டெட் டர்னரை "ஒலிபரப்பு வரலாற்றின் மாபெரும் ஆளுமைகளில் ஒருவர், எனது நண்பர். "எனக்கு எப்போதெல்லாம் அவர் தேவைப்பட்டாரோ, அப்போதெல்லாம் அவர் இருந்தார்; ஒரு நல்ல நோக்கத்திற்காகப் போராட எப்போதும் தயாராக இருந்தார்" என்று புகழ்ந்துள்ளார்.
சிஎன்என்-இன் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரியும் தலைவருமான மார்க் தாம்சன், டர்னரை "நாம் யாரின் தோள்களின் மீது நிற்கிறோமோ அந்த மாபெரும் மனிதர் மறைந்துள்ளார். இன்று நாம் அனைவரும் ஒரு கணம் ஒதுக்கி, அவரையும், நமது வாழ்விலும் உலகிலும் அவர் ஏற்படுத்திய தாக்கத்தையும் நினைவுகூருவோம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications