இனி ஒரு கலைஞர் மீண்டும் வர மாட்டார்.. துபாயில் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி
Recommended Video
துபாய்: துபாயில் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் நடைபெற்றது.
09-08-2018 வியாழன் மாலை 6.30 மணியளவில் துபாய் தேரா கிரான்ட் எக்ஸ்செல்சியர் ஹோட்டலில் வைத்து மறைந்த முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இரங்கல் கூட்டம் முதலில் 2 நிமிடம் மௌன அஞ்சலியுடன் துவங்கியது.
இந்நிகழ்ச்சியில் துபாய் இந்திய தூதர் (பொறுப்பு) திருமதி சுமதி வாசுதேவன் கலைஞர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி தனது உரையில் தலைவர் கலைஞர் அவர்களின் கலை, இலக்கிய, திரைத் துறை, அரசியல், எழுத்து, பேச்சு மற்றும் பல்வேறு திறமைகளை வியந்து பாராட்டி பேசினார். குறிப்பாக பராசக்தி பட வசனங்கள் தம்மை ஈர்த்ததாக கூறினார். கலைஞர் அவர்கள் விட்டுச் சென்ற பல்வேறு சீர் திருத்தப் பணிகளை நம் தொடர்ந்து செய்து ஏழை எளிய, நடுத்தர, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு பாடு பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மலேசிய துதர் நிர்மல் சண்முகம் தலைவர் கலைஞர் அவர்கள் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி, தனது உரையில் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல தலைவர் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தலைவர் என்றும், கலைஞர் அவர்கள் மிகப்பெரிய ஆளுமை என்றும் புகழாரம் சூட்டினார்.
அமீரக திமுக ஒருங்கிணைப்பாளர் அரிகேசவநல்லூர் எஸ் எஸ் மீரான் பேசும் போது கலைஞர் அவர்கள் கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை பாராட்டி இனி ஒரு தலைவர் கலைஞர் அவர்கள் மாதிரி வர மாட்டார்கள் என்று பாராட்டி பேசினார்.
சிம்ம பாரதி பேசும்போது கலைஞர் அவர்கள் செய்த சமூக தொண்டினை நினவு கூர்ந்தார் . கலைஞர் அவர்கள் ஒரு ஒப்பற்ற தலைவர் எனப் பேசினார்.
முஸ்தபா பேசும்போது கலைஞர் அவர்கள் கொண்டு வந்த பல்வேறு சிறுபான்மையினர் நலத்திட்டங்களை பாராட்டி தலைவர் கலைஞர் அவர்கள் சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்று பேசினார்.
அமீரக காயிதே மில்லத் பேரவை துணைப் பொதுச் செயலாளர் பரக்கத் அலி கலைஞர் அவர்களுக்கும் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களுக்கும் இருந்த நல்லுறவையும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய பணிகளையும் நினைவு கூர்ந்தார்.
SDPI ஃபைஸல் உரையாற்றும் போது சிறுபான்மை சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்தார்.
தமுமுக / மமகவின் இப்றாஹீம் பேசும்போது கலைஞர் அவர்கள் கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை நினைவுகூர்ந்து குறிப்பாக தமுமுக வின் இலவச ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு கலைஞர் அவர்கள் சொந்த செலவில் இரண்டு ஆம்புலன்ஸ் ஊர்திகள் கொடுத்ததை நினைவு கூர்ந்து பேசினார். "ரேடியன்ட் ஸ்டார்" MD ஆபித் ஜுனைத், "வெஸ்டெர்ன் ஆட்டோ" CEO கமால், DTS தலைவர் ஜெயந்தி சுரேஷ்., முத்தமிழ் சங்கம் தலைவர் மோகன் பிள்ளை, திமுக முத்த உறுப்பினர் & ETA ED அன்வர் பாட்சா, ஆசிப் மீரான், ஜெஸிலா ரியாஷ்,மதிமுக வில்லுசேரி பால முருகன், கவிஞர் காவிரி மைந்தன், கவிதாயினி அஞ்சுகம், RJ அஞ்சனா, மற்றும் பலர் பேசினர்.
இறுதியாக பேசிய ஜெப குமார் கலைஞர் அவர்கள் பின்பற்றி வந்த ஐந்து சமூக நீதி கொள்கைகளான 1. ஜாதி பார்க்காத சமூகம் 2. மதம் பார்க்காத சமூகம் 3. ஏழை பணக்கார ஏற்ற தாழ்வு இல்லாத சமூகம், 4.பெண்ணுரிமை பேணும் சமூகம், 5. பாட்டாளிகளின் உரிமையை பேணி பாதுகாப்பது போன்றவற்றைப் பேணிப் பாதுகாப்போம் என்று கூட்டத்தினரை உறுதிமொழி எடுக்கச் சொல்ல கூட்டத்தினர் அதை திரும்பச் சொல்லி உறுதிமொழி எடுத்துகொன்டனர்