5 வருட ரகசிய பிளான்.. திடீரென்று "டிஜிட்டல் கரன்சியை" களமிறக்கிய சீனா.. என்ன திட்டம்? - முழு பின்னணி
பெய்ஜிங்: கொரோனா காரணமாக உலக நாடுகள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சீனா புதிய நடவடிக்கையாக தற்போது டிஜிட்டல் பணத்தை வெளியிட தொடங்கி உள்ளது.
Recommended Video
உலகமே கொரோனா காரணமாக ஸ்தம்பித்து போய் உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா என்று எல்லா நாடுகளின் பொருளாதாரமும் மொத்தமாக கொரோனா காரணமாக முடங்கி உள்ளது. இதில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் உலக நாடுகள் திணறி வருகிறது.
ஒரு பக்கம் உலக நாடுகள் இப்படி திணறி வர இன்னொரு பக்கம் சீனாவில் பொருளாதாரம் சீரடைய தொடங்கி உள்ளது. கொரோனா தொடர்பான உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் சீனாவில் பொருளாதாரம் மிக வேகமாக வளர தொடங்கி உள்ளது.

சீனாவின் அடுத்த மூவ்
இந்த நிலையில்தான் சீனா தனது அடுத்த மூவை செய்ய தொடங்கி இருக்கிறது. உலக நாடுகளுக்கு உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய தொடங்கி உள்ள சீனா தற்போது தங்கள் நாட்டிற்குள் டிஜிட்டல் கரன்சி எனப்படும் டிஜிட்டல் பணத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. ஆம் சீனாவில் மத்திய வங்கிகள் எல்லாம் சேர்ந்து இப்படி டிஜிட்டல் பணத்தை இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக இதன் அளவை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.

உலகில் இதுதான் முதல்முறை
உலகம் முழுக்க பிட் காயின்கள் நிறைய உள்ளது. ஆனால் ஒரு நாட்டு வங்கியே அதிகாரபூர்வமாக டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவது இதுதான் முதல்முறை. இந்த டிஜிட்டல் கரன்சி என்பது உங்கள் வங்கி கணக்கில் சேர்க்கப்படாது. அதற்கு பதிலாக இந்த டிஜிட்டல் கரன்சிக்கு என்று தனியாக வேலட் ஒன்று அளிக்கப்படும். அதில் இந்த பணத்தை வைத்துக்கொள்ள முடியும். இந்த திட்டத்திற்கு digital currency/electronic payment (DC/EP) என்று சீனா பெயர் வைத்துள்ளது.

சீனாவின் பணம்தான் டிஜிட்டல் ஆகிறது
இது புதிதாக வெளியாகும் பணம் என்று தப்பு கணக்கு போட வேண்டாம். இது சீனாவில் இருக்கும் யென் பணத்தின் டிஜிட்டல் வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த digital currency/electronic payment (DC/EP) திட்டத்தை ஐந்து வருடங்கள் போட்டு, தற்போது சீனா நிறைவேற்றி உள்ளது என்று கூறுகிறார்கள். மிகவும் ரகசியமாக இந்த திட்டத்தை சீனா செயல்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய வங்கிகள்
சீனாவின் முக்கியமான மத்திய வங்கிகளான இண்டஸ்டிரியல் கமர்ஷியல் வங்கி, கன்ஸ்ட்ரக்சன் வங்கி, அக்ரிகல்சரல் வங்கி மற்றும் சீன வங்கி ஆகிய வங்கிகள் இந்த டிஜிட்டல் கரன்சியை வெளியிட தொடங்கி உள்ளது. சீனாவில் இருக்கும் உற்பத்தி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் ஆகியவற்றில் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். போக போக இதன் பயன்பாட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.

காரணம் 1
இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. முதல் காரணம், கொரோனா காரணமாக சீனாவில் இருக்கும் பணம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சீனா மொத்தமாக இந்த நோட்களை கிருமி நீக்கம் செய்துவிட்டது. ஆனாலும் இனிமேல் பணம் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்று அஞ்சப்படுகிறது. இதை தடுக்கும் விதமான சீனா இப்படி டிஜிட்டல் கரன்சி பக்கம் செல்ல போகிறது என்கிறார்கள்

உலகம் முழுக்க
அதோடு மற்ற உலக நாடுகளுடன் சீனா இதேபோல் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த திட்டமிடுகிறது என்கிறார்கள். தற்போது உலகம் முழுக்க வர்த்தகத்திற்கு அதிகமாக அமெரிக்க டாலர்தான் பயன்படுத்தப்படுகிறது. இதை எப்படி மாற்றுவது என்று சீனா இத்தனை வருடங்களாக யோசித்து வந்தது. தற்போது கொரோனா காரணமாக அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனா டிஜிட்டல் கரன்சியை களமிறக்கி உள்ளது .

இரண்டாவது காரணம்
இனி உலக நாடுகளுடன் வர்த்தகம் செய்ய சீனா அமெரிக்க டாலருக்கு பதிலாக இப்படி டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதனால்தான் சீனாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்கள், கடைகள் எல்லாம் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த வேண்டும் என்று சீன அரசு கூறியுள்ளது. கிட்டத்தட்ட அமெரிக்க நிறுவனங்களை சீனா நெருக்கி உள்ளது. அமெரிக்காவை எதிர்காலத்தில் கட்டுப்படுத்தும் விதமான இப்படி சீன அரசு டிஜிட்டல் கரன்சியை களமிறக்கி இருக்கலாமென்று கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications