60% மக்கள் தடுப்பூசி போட்ட பிறகும்..இஸ்ரேலில் அதிகரிக்கும் கொரோனா..என்ன காரணம்?. நிபுணர்கள் விளக்கம்
ஜெருசலேம்: இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியா கொரோனா அலையை சமாளிக்க முடியாமல் தள்ளாடியது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கொரோனா அதிகரித்து வந்தது. அதே வேளையில் கொரோனா பாதிப்பு மிக குறைவாக இருந்த இஸ்ரேல் ஏராளமான தளர்வுகளை அளித்து பொது இடங்களை திறந்து விட்டது.
ஏராளமான மக்கள் தடுப்பூசி போட்டு இருந்ததால் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என்று அறிவித்தது. பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் இதற்கான விளைவை சில நாட்களில் இஸ்ரேல் அனுபவித்தது.
டெல்டா வைரஸ் காரணமாக ஜூலை மாதம் நடுப்பகுதியில் இருந்து இஸ்ரேலில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கின. இஸ்ரேலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,818 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 18 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். 1,100 பேர் தற்போது பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர், அதில் 700 பேர் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக குழந்தைகள் மத்தியில் நோயின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இஸ்ரேல் நாட்டில் கிட்டத்தட்ட 60% தடுப்பூசி போடப்பட்ட நிலையில், அதுவும் பெரும்பாலானோர் இரண்டு டோஸும் போட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது ஏன்? தடுப்பூசி டோஸ் வேலை செய்யவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மார்ச் மாதத்திலேயே இஸ்ரேல் நாட்டின் 9.3 மில்லியன் மக்களில் 50% பேர் தடுப்பூசி போட்டு விட்டனர். தொற்று (64%) மற்றும் அறிகுறி நோயை கண்டறிதல் (64%) ஆகியவற்றைத் தடுப்பதில் தடுப்பூசியின் செயல்திறனில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து கேள்வி எழும்பும் வேளையில் இஸ்ரேல் நாடு ஒப்புதல் அளித்த ஃபைசர்/பயோஎன்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் தொடக்கத்தில் 95% நோய் எதிர்ப்பு சக்தியுடன் செயல்படுவதாக கூறப்பட்டதால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என்று அறிவித்ததால், மக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லை. இதன் காரணமாகவும் பள்ளிகளை திறந்து விட்டதாலும் தொற்று அதிகரித்து விட்டதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
எந்த தடுப்பூசியும் 100% முழு பாதுகாப்பை வழங்க முடியாது.நோய்வாய்பட்ட ஒவ்வொரு நபரிடமும் ஆன்டிபாடிகளின் எண்ணிக்கை மாறுபடும். இதனால் தடுப்பூசி செலுத்திய பிறகும் திருப்புமுனை நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன. இதனால் பாதிப்பு அதிகரிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஃபைசர்/பயோஎன்டெக் உள்ளிட்ட கூட்டு தடுப்பூசிகள் டெல்டா வகைக்கு எதிராக சிறந்தவை, ஆனாலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மூன்றாவது டோஸ் கட்டாயம்(பூஸ்டர் டோஸ்) செலுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
கோடநாடு கொலை.. முதல்வர் ஸ்டாலின் கேட்ட 4 கேள்விகள்.. எடப்பாடி சொன்ன 3 பதில்கள்.. நடந்தது என்ன?
ஆனாலும் காலப்போக்கில் இதில் மாற்றமடையலாம் ஓரிரு வருடங்களில் மக்களுக்கு நான்காவது டோஸ் போட வேண்டிய நிலையும் ஏற்படலாம். நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து இது அமையும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெளிவாக கூறுகின்றனர். ''நோய் எதிர்ப்பு சக்தி குறைவது ஒரு உண்மையான சவாலாகும், ஒவ்வொரு நாடும் சமாளிக்க ஒரு தற்செயல் திட்டத்தை தயார் செய்ய வேண்டும்'' என்று இஸ்ரேலிய சுகாதார பராமரிப்பு நிறுவனமான கிளாலிட்டின் தலைமை அதிகாரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.