கடுங்குளிரில் உறையும் மாடுகளுக்கு பிரா.. எக்ஸ்ட்ரா 2 லிட்டர் பால்.. குஷியில் விவசாயிகள்
மாஸ்கோ: ரஷ்யாவில் கடுங்குளிரால் நடுங்கும் மாடுகளுக்கு உல்லனால் செய்யப்பட்ட ஆடைகளை அதன் உரிமையாளர் அணிவித்திருக்கிறார்.
உலகில் பெரும்பாலான பகுதிகள் ஐஸ்களால் உறைந்துள்ளன. கடும் வெயிலால் கால்நடைகள் அவதிப்படுவதை போல் கடுங்குளிராலும் கால்நடைகள் அவதியுறுகின்றன. ஆண்டு முழுவதும் குளிராக இருக்கும் இடங்கள் மற்ற இடங்களை விட அதிகம் பாதிக்கப்படுகின்றன.
இந்த குளிர் பிரதேசங்களில் மக்கள் தங்கள் உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள கம்பளியால் ஆன ஆடைகள், குல்லா உள்ளிட்டவைகளை அணிந்திருப்பர். ஆனால் கால்நடைகள், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் தங்கள் உடல் குளிருக்கு என்ன செய்ய முடியும்?
விவசாயி
இதற்கு ரஷ்யாவில் உள்ள ஒரு விவசாயி நிகாலே அட்லாசோவ் தன்னிடம் உள்ள 5 பசுமாடுகளுக்கும் கைகளால் தைக்கப்பட்ட பிரா போன்ற கம்பளி உடைகளை வடிவமைத்துள்ளார். இவர் யாகுட்டியாவில் உள்ள ஓமியாகோன் கிராமத்தில் தங்கியுள்ளார். இந்த கிராமத்தில்தான் வெப்பநிலை மைனஸ் 45 டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது.
யாகுட் மாடுகள்
குளிர்காலத்தில் யாகுட் மாடுகள் இப்படித்தான் தனது உடலை கதகதப்பாக வைத்துக் கொள்கின்றன. நிகாலே ஓய்வு பெற்ற சுரங்க பொறியாளர் ஆவார். அவரது கிராமத்தில் எப்போதும் குளிரானது -67.7 டிகிரியாக இருக்கும். இது குளிர் துருவம் என்றே அழைக்கப்படுகிறது. முதலில் பசுக்களை வரிசையாக நிற்க வைத்து விடுவார்.
வெப்பநிலை
ஒரு வயது முதிர்ந்த பசு, நீரை குடித்த பிறகு அதன் வெப்பநிலை -30 முதல் -35 டிகிரியாக குறையும். அப்போது பசுக்களுக்கு பிரா அணிவிக்கப்படுகிறது. அந்த உடையை தவிர வேறு எந்த ஆடைகளும் அந்த பசுக்களுக்கு அணிவிக்கப்படுவதில்லை.
உள்ளூர் மக்கள்
பசுவின் உடலை சுற்றி இரண்டு பட்டைகளும் அதன் வாலின் கீழ் பகுதியில் ஒரு பட்டையுடன் கட்டப்பட்டிருக்கும். இந்த ஆடையின் முக்கிய நோக்கம் மாடுகளின் மென்மையான சருமத்திற்கு பாதுகாப்பு அளிப்பதாகும். இந்த ப்ராவை பசுக்களுக்கு கட்டுவதால் ஒரு பசு சுமார் இரண்டு லிட்டர் பாலை எக்ஸ்ட்ரா கொடுப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.