புளோரிடா சிறையில் கேஸ் விபத்து: 2 கைதிகள் பலி, 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்.
புளோரிடா: இன்று அமெரிக்கச் சிறையில் ஏற்பட்ட பயங்கர கேஸ் விபத்தில் 2 கைதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்ட கைதிகள் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ளது புளோரிடா மாகாணம். அங்கு பென்சகோலா பகுதியில் உள்ள சிறை ஒன்றில் இன்று பயங்கர கேஸ் விபத்து ஏற்பட்டது. அதில் அச்சிறைக் கட்டிடத்தின் ஒரு பகுதி முழுவதுமாக சேதமடைந்தது. விபத்து நடந்தபோது ஜெயிலில் சுமார் 600 கைதிகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் சிக்கி இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளனர். 100க்கும் அதிகமான கைதிகள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அருகிலிருந்த சேக்ரட் ஹார்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேதமடைந்த சிறையில் இருந்த மற்ற கைதிகள் உடனடியாக பாதுகாப்பாக அருகிலுள்ள மாகாணங்களின் சிறைகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 200 பெண் கைதிகளும் அடங்குவர்.
இவ்விபத்தை நேரில் பார்த்த அருகிலுள்ள கேஸ் நிலையத்தில் பணியாற்றும் பணியாளர் ஒருவர் கூறுகையில், திடீரென்று பூகம்பம் ஏற்படுவது போன்று பெரிய சத்தம் கேட்டது. நிலமும் அதிர்ந்தது. அப்போது வெளியே வந்து பார்த்தபோது வானம் முழுவதும் நெருப்பு புகையால் சூழ்ந்திருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எஸ்காம்பியா மற்றும் புளோரிடா மாகாணத்தில் எமர்ஜென்சி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏறகனவே, கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் புளோரிடாவில் சாலைகள் அனைத்தும் கடுமையாக சேதமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.