250 அமெரிக்க ஊழியர்களை தூக்கிவிட்டு ஹெச்1-பி விசா இந்தியர்களை உள்ளிழுக்கும் “வால்ட் டிஸ்னி”!
சென்னை: அமெரிக்காவில் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு நிறுவனம் வால்ட் டிஸ்னி தற்போது பணியாற்றும் 250 அமெரிக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு அவர்களுக்கு பதிலாக ஹெச்1-பி விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு அந்த வேலையை அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த அக்டோபரில் டிஸ்னியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இது குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டது. இந்தியாவில் இருந்து இயங்கும் அவுட்சோர்ஸிங் கம்பெனிகள் மூலமாக அந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பதவியிழக்கப் போகும் டிஸ்னி ஊழியர்கள்தான் அவர்களுக்கு பதிலாக நியமிக்கப்படும் இந்தியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
யாரோ சில நபர்களைக் கொண்டு எங்களது இருக்கைகளை நிரப்பிவிட்டு, எங்களை வெளியே தூக்கி எறிவது மனிதாபிமானமற்ற செயல் என்று அமெரிக்காவைச் சேர்ந்த டிஸ்னி ஊழியர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் எச்.1பி விசா மூலம் இந்தியர்களை பணிக்கு அமர்த்துவதில் முறைகேடுகள் நடைபெறுகிறதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஜனநாயக கட்சி செனட்டர் பில் நெல்சன், ஒபாமா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு, சதர்ன் கலிபோர்னியா எடிசன் என்ற நிறுவனம் 540 பணியாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்து விட்டு அந்த இடங்களில், இந்திய நிறுவன பணியாளர்களை அமர்த்தியது சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications