எலான் மஸ்கிற்கு ரூ.886,91,20,00,00,000 சம்பளம்.. தமிழக ஜிடிபியை விட கிட்டத்தட்ட 2.38 மடங்கு அதிகம்!
வாஷிங்டன்: உலகின் மாபெரும் பணக்காரரான எலான் மஸ்கிற்கு இப்போது புதியதொரு சம்பள பேக்கேஜ் திட்டம் தரப்பட்டுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு வரும் இந்தச் சம்பள பேக்கேஜ்ஜில் அவருக்கு ஒரு டிரில்லியன், அதாவது ரூ.88.69 லட்சம் கோடி சம்பளமாகக் கிடைக்கும். இது கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபியை விட 2.38 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், ட்விட்டர், நியூரோலிங் என பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதில் ஸ்பேஸ்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டாலும் கூட அவருக்கு வருமானத்தைக் கொட்டு தரும் நிறுவனம் என்றால் அது டெஸ்லா தான். ஒவ்வொரு ஆண்டும் டெஸ்லாவில் இருந்தே அவருக்குக் கணிசமான வருமானம் கிடைக்கிறது.

டெஸ்லா
இப்போது கடந்த சில ஆண்டுகளாகத் தான் BYD என்ற சீன நிறுவனத்திடம் இருந்து டெஸ்லா பிரஷரை சந்திக்க ஆரம்பித்துள்ளது. மேலும், டிரம்பும் கூட டெஸ்லாவுக்கு குடைச்சலைத் தரும் வகையில் கார்பன் வரி கிரெடிட்டை ரத்து செய்திருந்தார். இதனால் டெஸ்லா இந்தாண்டு தொடக்கம் முதலே தடுமாறி வருகிறது. இந்தச் சூழலில் தான் எலான் மஸ்கிற்கு புதிய சம்பள பேக்கேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் 75% முதலீட்டாளர்களின் ஆதரவோடு இந்த பேக்கேஜ் நிறைவேற்றப்பட்டது.
சம்பளம் எவ்வளவு!
இந்தத் திட்டத்தின் கீழ் எலான் மஸ்கிற்கு ஒரு டிரில்லியன் டாலர் சம்பளம் வழங்கப்படும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.88.69 லட்சம் கோடியாகும். நம்பரில் சொல்ல வேண்டும் என்றால் ரூ.886,91,20,00,00,000.. இதைப் பார்த்தாலே தலை சுற்றுகிறது தானே.! அவரது சம்பள பேக்கேஜ் என்பது கிட்டத்தட்ட பல சின்ன நாடுகளின் ஜிடிபியை விட அதிகம். நமது தமிழ்நாட்டின் ஜிடிபி உடன் ஒப்பிட்டாலும் கூட அது 2.38 மடங்கு அதிகமாகும். அவ்வளவு பெரிய சம்பள பேக்கேஜ் தான் அவருக்குக் கிடைக்கவுள்ளது.
எப்படி கிடைக்கும்
இருப்பினும், இங்கு நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இந்தச் சம்பளம் உடனே எலான் மஸ்கிற்கு தரப்படாது. இது 10 ஆண்டுக்கால பேக்கேஜ் ஆகும். மேலும், இதை 12 பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். டெஸ்லா ஒவ்வொரு பிரிவையும் அடையும்போது எலான் மஸ்கிற்கு குறிப்பிட்ட அளவுக்குப் பங்குகள் வழங்கப்படும்.
அதில் ஒன்று தான் டெஸ்லாவின் மதிப்பை உயர்த்துவது. இப்போது டெஸ்லா மதிப்பு 1.5 டிரில்லியன் டாலராக இருக்கிறது. இது 2 டிரில்லியன் டாலராக உயரும்போது அவருக்கு முதலில் குறிப்பிட்ட சதவிகித பங்குகள் வழங்கப்படும். இப்படியே சந்தை மதிப்பு 8.5 டிரில்லின் டாலர் அடையும் வரை அவருக்கு 12 பிரிவுகளாகப் பங்குகள் கிடைக்கும்.
எலான் மஸ்க்
சந்தை மதிப்பு மட்டுமின்றி, அவர் வேறு சில நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. அதாவது அடுத்த 10 ஆண்டுகளில் 2 கோடி மின்சார வாகனங்களைச் சந்தைக்கு கொண்டு வர வேண்டும். சுமார் 10 லட்சம் ரோபோடாக்சிகளை மார்கெட்டிற்கு கொண்டு வர வேண்டும். 10 லட்சம் ஆப்டிமஸ் ஹ்யூமனாய்டு ரோபோக்களை சந்தைக்குக் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளும் இருக்கிறது.
இருப்பினும், இதை எல்லாம் ஈஸியாக செய்ய முடியும் என்பதாலேயே எலான் மஸ்க் இந்தச் சம்பள பேக்கேஜ்ஜை கேட்டுப் பெற்றுள்ளார். இதை மட்டும் அவரால் அடைய முடிந்தால் ரூ.88.69 லட்சம் கோடியை அள்ளி செல்வார் எலான் மஸ்க். இது உலகில் இதுவரை எந்தவொரு சிஇஓவுக்கும் கிடைக்காத ஒரு சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications