எங்களைப் பார்த்து பயப்படாதீங்க !! மேற்கத்திய நாடுகளுக்கு சொல்கிறார் ரஷ்ய அதிபர் புதின் !!!
மாஸ்கோ : ரஷ்யாவைப் பார்த்து மேற்கத்திய நாடுகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கும், நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய கருத்து வேறுபாடுகள் இருப்பதாக கூறப்படுவதை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்
இத்தாலி நாட்டைச் சேர்ந்த நாளிதழுக்கு புதின் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது...
என்னை பொறுத்தவரையில் ரஷ்யாவை கண்டு யாரும் பயப்பட தேவையில்லை என்றுதான் சொல்லுவேன். உலகம் இன்றைக்கு மாறிவிட்டது. நீங்கள் நினைப்பதை போல ஒரு மிகப்பெரிய ராணுவ போரை இன்றைக்கு மக்கள் நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள்.
நாம் வேறு பல திட்டங்களை செயல்படுத்த வேண்டியிருக்கிறது. நேட்டோ நாடுகளை ரஷ்யா தாக்கும் என யாரும் நினைக்க மாட்டார்கள். அப்படியே யாராவது நினைத்தால் அவர் நோயாளியாகத்தான் இருப்பார். அதுவும் அந்த நோயாளி தூக்கத்தில் தான் அப்படி நினைக்கக்கூடும்.
நேட்டோ உறுப்பு நாடுகள் ராணுவம் மற்றும் பாதுகாப்பிற்காக செலவிடும் தொகை ரஷ்யாவை விட 10 மடங்கு அதிகமாகும். உதாரணத்திற்கு அமெரிக்க ராணுவ பட்ஜெட் உலகிலேயே மிகப்பெரியது என்பதை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன். உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
இவ்வாறு இத்தாலி நாளிதழுக்கு ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார்.