எங்க நாட்டு உள்விவகாரங்களில் இந்தியா தலையிடக் கூடாது... நேபாள பிரதமர் ஷர்மா ஒளி வார்னிங்
காத்மண்டு: தங்களது நாட்டு உள்விவகாரங்களில் இந்தியா தலையிடக் கூடாது என்று நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒளி கடுமையாக எச்சரித்துள்ளார்.
நேபாளம் இந்து நாடாக இருந்த போதும் மதச்சார்பற்ற அரசியல் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசியல் சாசனத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள இந்திய அரசு பரிந்துரைத்தது.
இதனை நேபாளம் நிராகரித்தது. இதன் பின்னர் நேபாளத்தில் இந்திய வம்சாவளியினராகிய மாதேஸிகள் தாங்கள் புதிய அரசியல் சாசனப்படி இரண்டாந்தர குடிமக்களாக்கப்பட்டுள்ளதாக கூறி கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இது பெரும் வன்முறையாக வெடித்தது.
இதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து மாதேஸிகள் வசிக்கும் எல்லைப் பகுதி வழியாக நேபாளத்துக்குள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் டிரக்குகள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக இந்த நிலைமை நீடித்து வருகிறது.
இதனால் நேபாளத்தின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்தியா மறைமுகமாக தங்கள் மீது பொருளாதாரத் தடை விதிப்பதாக கூறி போராட்டங்களும் வெடித்தன. இந்நிலையில் நேபாளத்துக்கு சீனா கை கொடுத்து உதவ ஆரம்பித்தது. சீனாவில் இருந்து எரிபொருட்கள் நேபாளத்துக்கு வரத் தொடங்கியது.
அதே நேரத்தில் மாதேஸிகளின் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையையும் நேபாளம் தீவிரப்படுத்தியது. இதில் நேபாள போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் பலியானது இருநாடுகளின் உறவில் மேலும் பதற்றத்தை அதிகரித்தது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்த சில மணிநேரங்களிலேயே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் ஷர்மா ஒளி, எங்களது அரசியல் சாசனம் எந்த ஒரு நாட்டுக்கும் எதிரானது அல்ல.. எங்கள் நாட்டு உள்விவகாரங்களில் இந்தியா தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் இருநாடுகளிடையேயான உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளது.