அமெரிக்கா அதிபர் தேர்தலில் களமிறங்குகிறார் 'ரியல் எஸ்டேட் பெருமுதலை' டொனால்ட் டிரம்ப்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபர் தேர்தல் களம் மெல்ல மெல்ல சூடு பறக்கத் தொடங்கியுள்ளது. இத்தேர்தலில் தாமும் போட்டியிடப் போவதாக அந்நாட்டின் கோடீஸ்வரர்களில் ஒருவரான டொலாட் டிரம்ப் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது.. ஆனால் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது.

ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் முன்னாள் அதிபர் பில்கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி போட்டியிடுகிறார். அவர் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு கடும் போட்டி உள்ளது. முன்னாள் ஆளுநர்கள், சென்ட் உறுப்பினர்கள் பலரும் போட்டியிட போவதாக அறிவித்து வருகின்றனர்.
முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் தம்பி ஜெப் புஷ் போட்டியிட போவதாக அறிவித்தார். இவரது தந்தை சீனியர் புஷ்சும் அதிபராக பதவி வகித்தவர். இந்த நிலையில் அமெரிக்காவின் கோடீஸ்வரர் டொனால்டு டிரம்ப் தாமும் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் டி.வி. ரியாலிட்டி ஷோக்களை நடத்தும் இவரது சொத்து மதிப்பு ரூ. 55 ஆயிரம் கோடி. அமெரிக்க கோடீஸ்வரர்களில் 10-வது இடத்தில் உள்ளார். நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எங்கும் எதிலும் அமெரிக்கா வெற்றி பெற அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக கூறி பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்.












Click it and Unblock the Notifications