400 இடங்களில் 4 லட்சம் வானவேடிக்கைகள்... புத்தாண்டு தினத்தன்று புதிய சாதனை: துபாய் திட்டம்
துபாய்: வரும் புத்தாண்டு அன்று பிரமாண்ட வான வேடிக்கைகள் நடத்தி கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது துபாய்.
விதவிதமான சாதனைகள் புரிந்து கின்னஸில் இடம் பெறுவது ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஒன்றும் புதிதான விஷயமல்ல. அந்தவகையில் வரும் புத்தாண்டு அன்று மிகப் பிரமாண்டமான வான வேடிக்கை நிகழ்ச்சிகளை நடத்தி புதிய உலக சாதனை நிகழ்த்த துபாயில் திட்டமிடப்பட்டுள்ளாது.
இந்த சாதனைக்கான ஆயத்த வேலைகள் படு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

புத்தாண்டு கொண்டாட்டம்...
ஐக்கிய அரபு குடியரசு நாடு இதுவரை கிட்டத்தட்ட 150 உலக சாதனைகளை படைத்துள்ளது. இந்த நாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் எண்ணெய் வளம் மிகுந்த துபாய், தன் பங்கிற்கு புதிய சாதனையை வரும் புத்தாண்டன்று நிகழ்த்த திட்டமிட்டுள்ளது.

சாதனைத் திட்டம்....
அதன்படி, புத்தாண்டு தினத்தன்று மாலை மிகப்பெரிய அளவிலான வான வேடிக்கை ஒன்றை நடத்தி பழைய வான வேடிக்கை சாதனையை முறியடிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பாம் ஜுமெரியா பகுதிக்கும் உலகத்தீவுப்பகுதிக்கும் இடைப்பட்ட 100 கிலோ மீட்டர் பரப்புடைய கடல் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆயத்த நடவடிக்கைகள்....
இந்த கண்கவர் வானவேடிக்கைக்காக 200 வானவேடிக்கை வீரர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர். இவர்கள் 100 கம்யூட்டர்கள் துணையுடன் 400 இடங்களில் 4 லட்சம் வானவேடிக்கைகளை நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர்.

வித்தியாசமான பட்டாசுகள்....
இந்த வானவேடிக்கை நிகழ்ச்சியில், பறக்கும் பருந்து, 10 கிலோ மீட்டர் அகலமுள்ள சூரிய உதயம், தேசியக்கொடி, வானில் 6 நிமிட வானவேடிக்கை நடன நிகழ்ச்சி என பிரம்மாண்டமான , வித்தியாசமான பல அம்சங்கள் நடத்தப் பட உள்ளது.

தக்க பாதுகாப்பு...
அதேசமயம் இந்த பிரம்மாண்ட வானவேடிக்கையைப் பார்க்க வரும் மக்களுக்கும், சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கும் சிறப்பான பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படும் எனவும் துபாய் நிர்வாகம் வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications