தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாக்க முடியாதா? - மேரிலாண்ட் அமைச்சர் டாக்டர் ராஜன் நடராஜன்
துபாய் (ஐக்கிய அரபு நாடுகள்): அயல்நாடுகளை முதல் நிலைக்கு உயர்த்தும் தமிழரால் தமிழகத்தை அந்த மாதிரி முதலிடத்துக்கு உயர்த்த முடியாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் டாக்டர் ராஜன் நடராஜன்.
டாப் 10 வெளிநாடு வாழ் தமிழர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி துபாய் தமிழ்ச் சங்கம் சார்பில் துபாயில் நடந்தது. மேரிலாண்ட் மாகாண துணைச் செயலர் டாக்டர் ராஜன் நடராஜன் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு துபாய் தமிழ்ச் சங்கத்தினர் விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார்கள்.
துபாய் தமிழ்ச் சங்கம்
துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சித்திரைத் திருவிழா 2014 நிகழ்ச்சியின் போது இந்த விருதுகள் வழங்கப்பட்டன. விழாவை டிடிஎஸ் ஈவெண்ட்ஸ் நிறுவனம் நடத்தியது. இந்திய பள்ளி வளாகத்திலுள்ள ஷேக் ராஷித் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான அமீரக பிரமுகர்களும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களும் கலந்து கொண்டனர்.
உலகெங்கும் சுற்றுப் பயணம் செய்து சர்வதேச வர்த்தக பிரமுகர்களை சந்திக்கும் டாக்டர் ராஜனை, அமீரக வர்த்தகப் பிரமுகர்களும் சந்தித்தனர். அப்போது அமீரக வளர்ச்சிக்கு இந்தியர்கள்தான் காரணம் என்பதை அவர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டை நம்பர் ஒன்னாக்க முடியாதா?
அமீரக வர்த்தகர்களின் இந்த தகவலைக் குறிப்பிட்டு பேசிய டாக்டர் ராஜன், "அமீரக வர்த்தக பிரமுகர்கள் குறிப்பிட்ட இந்தியர்களில் பெரும்பான்மையானோர் தமிழர்களே ஆவார்கள். எங்கு சென்றாலும் தமிழர்களின் கடின உழைப்பும், அயராத முயற்சியும் தான் நம்மை அடையாளம் காட்டுகிறது.
அயல் நாட்டில் நம்முடைய திறமைகளை பயன்படுத்தி அந்த நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் நம்மால் , நமது தமிழ் நாட்டை நம்பர் ஒன் நிலைக்கு கொண்டு வர முடியாதா?" என்று கேள்வி எழுப்பினார்.
வெளிநாட்டு வாழ் தமிழ் வர்த்தகர் சபை
தமிழக நலனுக்காக உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து ஒரு செயல் திட்டம் உருவாக்கப் போவதாகவும் தெரிவித்தார். வெளிநாட்டு வாழ் தமிழ் வர்த்தகர் சபை (Non Resident Tamil Entrepreneur (NRTE) Forum) என்ற பெயரில் 2015 ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கும் இந்த அமைப்பில் டிடிஸ் நிறுவனம் உள்ளிட்ட முக்கிய தமிழ் நிறுவனங்கள் இடம்பெறும். அமீரகத் தமிழர்களும் முக்கிய பங்களிப்பார்கள்.
தமிழ அரசுடன்
இந்த வர்த்தக சபை மூலம், உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழ் தொழிலதிபர்களை ஒருங்கிணைத்து புதிய தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் தமிழகத்திற்கு முன்னுரிமை கொடுத்து புதிய தொழில்கள் தொடங்குவதற்கு ஆவண செய்யப்படும்.
தமிழக அரசுடன் கலந்தாலோசித்து மருத்துவ சுற்றுலா, கல்வி, உயர் தொழில் நுட்பம், கட்டமைப்புகள், வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் தமிழகம் முதலிடம் அடையச்செய்வதற்கு தமிழக அரசுடன் இணைந்து செயல்படும்," என்று கூறினார்.
நம்ம புதுக்கோட்டைக்காரர்...
டாக்டர் ராஜன் நடராஜனுக்கு டிடிஎஸ் ஈவெண்ட்ஸ் மற்றும் துபாய் தமிழ்ச்சங்க தலைவர் ஜெயந்தி மாலா சுரேஷ் பாராட்டுகளை தெரிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.
டாப் 10 வெளி நாடு வாழ் இந்தியர்களில் ஒருவராக பட்டியலிடப்பட்டுள்ள டாக்டர் ராஜன் நடராஜனை கவுரவிப்பதில் தாங்கள் பெருமை அடைவதாகவும் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த தமிழரான டாக்டர் ராஜன் நடராஜனுக்கு இந்த விருதினை வழங்குவதில் துபாய் தமிழ்ச் சங்கம் பெருமை கொள்வதாக தெரிவித்தார்.