இருளில் மூழ்கிய பாகிஸ்தான்.. திடீரென துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. 12 மணி நேரம் ஆகுமாம்.. என்னாச்சு?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மின் விநியோக கட்டமைப்பில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக நாடு முழுவதும் கடும் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய சுமார் 12 மணி நேரம் வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7.34 மணியளவில் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்னழுத்தத்தில் ஏற்பட்ட சீரற்ற தன்மையே இந்த மின்வெட்டுக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மின்வெட்டு காரணமாக கராச்சி, லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தவித்து வருகின்றன. இது குறித்து அந்நாட்டின் மின்துறை அமைச்சர் குர்ரம் தஸ்தகிர் ஜியோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இது ஒரு பெரிய பிரச்னை இல்லை" என்று கூறியுள்ளார்.
மேலும், "இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சில பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டிருக்கிறது. மற்ற இடங்களிலும் நிலைமை சீர் செய்யப்படும்" என்று கூறியுள்ளார். குட்டூவில் இருந்து குவெட்டாவிற்கு செல்லும் இரண்டு டிரான்ஸ்மிஷன் லைன்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் குவெட்டா உட்பட பலுசிஸ்தானின் 22 மாவட்டங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்வெட்டு எப்போது சீர் செய்யப்படும் என்றும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இவ்வாறு மின் வெட்டு ஏற்படுவது ஒன்றும் பாகிஸ்தானில் புதியது கிடையாது. ஏற்கெனவே கடந்த அக்டோபர் மாதம் இதே போல மிகப்பெரிய அளவுக்கு மின்வெட்டு ஏற்பட்டது. இந்நிலையில் இது இரண்டாவது மின்வெட்டு சம்பவமாகும். ஜெனரேட்டர்கள் ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே இருப்பதால் மற்ற அரசு மருத்துவமனைகள் மின்வெட்டால் கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளன. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான பெஷாவரின் லேடி ரீடிங் மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் முகமது ஆசிம் கூறுகையில்,
"அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் ஆய்வகங்களுக்கு மட்டும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கும் அளவுக்கு பேக் அப் ஜெனரேட்டர்கள் இருப்பதாக" கூறியுள்ளார். பாகிஸ்தானின் மின்சாரத்துறை தற்போது பெரும் கடனில் சிக்கியிருக்கிறது. மின்துறையின் உள் கட்டமைப்புகள் மற்றும் இணைப்புகளில் அதிக அளவு முதலீடு இல்லாத காரணத்தினால் மின் கட்டமைப்பு சரியாக பராமரிக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால்தான் இம்மாதிரியான பிரச்னைகள் அதிகம் எழுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.