உலகம் அழியப்போகிறது எனக் கூறி அதிர்ச்சி கிளப்பிய எபோ நோவா அதிரடியாக கைது.. என்னாச்சு?
கானா: "டிசம்பர் 25 ஆம் தேதி உலகம் அழியப்போகிறது" என்று கூறி மக்களிடையே பீதியை ஏற்படுத்திய எபோ நோவா என்பவரை கானா நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர். எபோ நோவா மழுப்பலாக வீடியோ வெளியிட்ட நிலையில், அவரை பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகக்கூறி காவல்துறை இன்று கைது செய்தது.
கானா நாட்டில் தன்னைத் தானே தீர்க்க தரிசியாக அறிவித்துக் கொண்ட எபோ நோவா என்பவர், தன்னை கடவுளின் அவதாரம் என்று மக்களிடம் பரப்பி வருகிறார். இவரை உள்ளூர் மக்கள் நோவா என்றும் ஜீசஸ் என்றும் அழைக்கின்றனர். இவர் கிழிந்த பழைய சாக்குத் துணிகளை அணிந்து கொண்டு, கையில் ஒரு பழமையான புத்தகத்தை ஏந்தியபடி வீடியோக்களை வெளியிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அவர் வெளியிடும் வீடியோக்கள் தற்போது உலகமெங்கும் வைரலாகி வருகின்றன. பைபிளில் வரும் நோவாவை போலவே, தானும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தூதுவன் என்று அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். எபோ நோவாவின் கணிப்பின் படி, கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25 ) அன்று தொடங்கும் மழை நிற்காமல் 3 ஆண்டுகள் வரை பெய்ய உள்ளதாக கூறினார்.
இது பிரளய காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை போல மிகப்பெரிய பேரரழிவை ஏற்படுத்தும். இந்த ராட்சச வெள்ளத்தில் உலகில் உள்ள மிக உயரமான அனைத்து சிகரங்களும் மூழ்கி விடும். இந்த பெரிய பிரளயம் ஒட்டுமொத்த பூமியையும் ஒரு முடிவில்லாத பெருங்கடலாக மாற்றும். வரவிருக்கும் ஜலப் பிரளயத்தில் மனிதர்கள் மட்டுமல்லாது , அனைத்து உயிரினங்களும் அழியக் கூடும் எனக் கூறினார்.
இந்த பிரளயத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், அவர்கள் தன்னுடைய பேழையில் ஏற வேண்டும் என்று கூறினார். இது மட்டுமல்லாது அவர் ஒரு சில வீடியோக்களையும் பதிவேற்றி இருந்தார். அந்த வீடியோக்களில் விலங்குகள் அவரது இருப்பிடத்தை நோக்கி வருவதைப் போல காட்சிப்படுத்தி இருந்தார். இதனால் பலர் அவர் சொன்னதையெல்லாம் நம்பத் தொடங்கினனர்.
எபா நோவா கடவுளின் கட்டளைப்படி இந்த அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்ற 10 பிரம்மாண்ட மரப் பேழைகளை கட்டி வருவதாக தெரிவித்தார். இதற்காக அவர் சுமார் 2,50,000 யூரோ செலவில் மரங்களை வாங்கியுள்ளதாகவும், அதன் மூலம் பேழைகள் செய்வதாகவும் இந்த ஒவ்வொரு பேழையிலும் சுமார் 5000 பேர் வரை தங்க வைக்க முடியும் என்றும் தெரிவித்தார். மேலும் பெரிய பேழை ஒன்று கோடிக்கணக்கான மக்களைக் தங்க வைக்கும் அளவிற்கு கட்டப்படுவதாகவும் கூறினார்.
இவர் சொல்வதை நம்பிய மக்கள் இதைக் கண்டு அச்சமடைந்தனர். அதில் பலர் தங்கள் வீடு, நிலம் மற்றும் நகைகளை விற்று, அந்தப் பணத்தை எபோ நோவாவிடம் கொடுத்துள்ளனர். புதிய நோவாவின் பேழையில் இடம் பிடிக்க தஞ்சம் அடைந்தனர். எபோ நோவா கட்டியுள்ள பேழையில் இடம் பிடித்து உலக அழிவிலிருந்து தங்களை காத்துக் கொள்ளலாம் என நம்பிக்கையில் இருந்தனர்.
ஆனால் டிசம்பர் 25 ஆம் தேதி எபோ நோவா சொன்னது போல் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் தன்னுடைய தொடர் பிரார்த்தனையால் கடவுள் மனமாற்றம் அடைந்து உலக அழிவைத் தள்ளி வைத்திருப்பதாக எபோ நோவா அறிவித்தார். இது ஒரு மிகப்பெரிய ஆன்மீக மோசடி என உலக அளவில் கண்டங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், டிசம்பர் 25 ஆம் தேதி உலகம் அழியப்போகிறது என்று கூறி மக்களிடையே பீதியை ஏற்படுத்திய எபோ நோவாவை கானா நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இணையதளங்களைக் கண்காணிக்கும் அந்நாட்டு காவல்துறையின் சிறப்புப் பிரிவு, எபோவின் இந்தச் செயல் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகக் கருதி இன்று அவரைக் கைது செய்தது. தற்போது அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு அச்சம் தரும் வகையில் ஆதாரமற்ற கருத்துகளைப் பரப்புபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கானா நாட்டு காவல்துறையினர் மீண்டும் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications