எகிப்து போராட்டம்: இஸ்லாமிய சகோதர இயக்கத்தின் மூத்த தலைவர் உட்பட 37 பேருக்கு ஆயுள் சிறை
கெய்ரோ: எகிப்தில் போராட்டங்களில் ஈடுபட்டதற்காக இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தைச் சேர்ந்த மூத்த வழிகாட்டி மற்றும் 36 இஸ்லாமியர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த அதிபர் முஹம்மது மோர்சி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியிறக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவரது ஆதரவாளர்களும், இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவர்களில் பலர் தேசத் துரோக குற்றம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் மரண தண்டனை பெற்றுள்ளனர். மேலும் பலர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அந்த வகையில், குவால்யாப் நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு நடந்த வன்முறைப் போராட்டங்கள் மற்றும் சாலை மறியல் தொடர்பாக இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தின் மூத்த தலைவர் முகமது படி உள்ளிட்ட 48 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது. இதில் முகமது படி உள்ளிட்ட 37 பேர் மீதான குற்றம் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்களுக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 11 பேரில் 10 பேருக்கு கடந்த மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொருவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.