எகிப்து: முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர் உட்பட 683 பேருக்கு தூக்கு தண்டனை!
கெய்ரோ: எகிப்தில் படுகொலை மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறி முன்னாள் அதிபர் மோர்சிக்கு ஆதரவாக முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர் உட்பட 683 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் இன்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் அதிபராக இருந்த மோர்சி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவரது ஆதரவாளர்கள் பெரும் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டம் வன்முறையில் வெடித்தது. இதில் போலீசார் உட்பட நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இந்த சம்பவத்துக்கு மோர்சிக்கு ஆதரவான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் மீது குற்றம்சாட்டப்பட்டது.
அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவர்களில் 529 பேருக்கு கடந்த மாதம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பான மற்றொரு வழக்கு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இதில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர் முகமது படீய் உட்பட அவரது ஆதரவாளர்கள் 683 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இந்த தூக்கு தண்டனை விதிப்பு தீர்ப்பால் எகிப்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த தீர்ப்பைக் கேட்டதும் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான பெண்களும் குடும்ப உறவினர்களும் கதறி அழுதனர்.
492 பேரின் தூக்கு தண்டனை ரத்து
அதேபோல் கடந்த மாதம் 529 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையும் இன்று நடைபெற்றது. அப்போது 529 பேரில் 492 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications