66 பேர் பயணித்த எகிப்து விமானத்தை தீவிரவாதிகள் குண்டுவைத்து தகர்த்தார்களா?
பாரீஸ்: மெடிடெரேனியன் கடலில் விழுந்ததாக கூறப்படும் எகிப்து விமானத்தில் குண்டு இருந்து அது வெடித்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இது தீவிரவாதிகளின் நாச வேலையாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருந்து 59 பயணிகள், 7 சிப்பந்திகளுடன் எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு புதன்கிழமை இரவு கிளம்பிய எகிப்து ஏர் நிறுவன விமானம் எம்.எஸ். 804 ராடாரில் இருந்து மாயமானது. பின்னர் விமானம் மெடிடெரேனியன் கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டே தெரிவித்தார்.
இதையடுத்து மெடிடெரேனியன் கடல் பகுதியில் உள்ள கிரேக்க தீவான கார்பதோஸ் அருகே விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது. கடலில் மிதந்த சில பொருட்கள் விமான பாகங்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அது விமானத்தின் பாகங்கள் இல்லை என்று கிரீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் விமானம் வானில் பறக்கையில் குண்டு வெடித்துச் சிதறி கடலில் விழுந்திருக்கும் என்று கூறப்படுகிறது. விமானத்தின் பாகங்களோ அல்லது பயணிகளின் உடல்களோ கிடைத்தால் தான் குண்டுவெடிப்பு சம்பவத்தை உறுதி செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்படி குண்டு வைத்திருந்தால் அது பயணிகள் இருக்கும் இடத்தில் அல்லது வேறு எங்கும் வைக்கப்பட்டதா என்பதை கண்டறிய வேண்டும். விமான விபத்திற்கு வெடிகுண்டு தான் காரணம் என்றால் பாரீஸ் விமான நிலையத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.
விமான விபத்திற்கு தீவிரவாத வேலை காரணமாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ள போதிலும் இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை.












Click it and Unblock the Notifications