விமானம் தரையில் விழுந்து சாகச வீரர்கள் 8 பேர் சாவு
ஹெல்சின்கி: குட்டி விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் விமான சாகசக வீரர்கள் 8பேர் உயிரிழந்தனர்.
ஃபின்லாந்து நாட்டில் குட்டி விமானங்களில் வானில் பறந்தபடி கீழே குதிக்கும் ஸ்கைடைவர் எனப்படும் சாகச விளையாட்டு வெகுபிரபலம். அந்த நாட்டின் சாடாகுன்டா மாகாணத்திலுள்ள, ஜமிஜர்வி ஏர்போர்ட்டில் இருந்து ஞாயிறுமாலை 10 சாகச வீரர்களுடன் குட்டி விமானம் ஒன்று புறப்பட்டது.
சற்று நேரத்தில் அந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டு அது பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்தது. விண்ணில் இருந்து தரையைநோக்கி விமானம் செங்குத்தாக பாய்ந்து வரத்தொடங்கியது.
இதைப்பார்த்ததும், பைலட்டும், மேலும் இரு சாகச வீரர்களும் உடனடியாக பாரசூட்டை கட்டிக்கொண்டு விமானத்தில் இருந்து கீழே குதித்தனர்.
ஆனால் பிற வீரர்கள் பாரசூட்டை விரிப்பதற்குள் விமானம் தரையில் மோதி சிதறியது. இந்த விபத்தில் 8 சாகச வீரர்கள் அதே இடத்தில் உடல் சிதறி உயிரிழந்தனர். பாரசூட் உதவியால் தப்பிய பைலட்டும் மேலும் இரு வீரர்களும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். விபத்துக்கான காரணம் குறித்து ஃபின்லாந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications