வீழ்ந்தது காபுல்.. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்.. அப்சர் கானி நாட்டை விட்டு வெளியேறினார்!
காபுல்: ஆப்கான் தலைநகர் காபுலை தாலிபான் படைகள் கைப்பற்றி உள்ளது. இதையடுத்து பதவியை ராஜினாமா செய்த அதிபர் அப்சர் கானி தஜிகிஸ்தான் நாட்டுக்கு தப்பி சென்றுள்ளார். இதனால் மொத்தமாக ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் சென்றுள்ளது.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் உள்நாட்டு போர் கிளைமேக்ஸை எட்டியுள்ளது. அங்கு தாலிபான்களுக்கும் ஆப்கான் அரசு படைகளுக்கு மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில் அங்கு தாலிபான்கள் வேகமாக வென்று வந்தது. ஆப்கானிஸ்தான் பகுதிகளை கடந்த இரண்டு மாதங்களாக தாலிபான்கள் வேகமாக கைப்பற்றி வந்தன.
தாலிபான் படைகளுக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையில் கடந்த வருடம் தோஹாவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற ஒப்புக்கொண்டன. இதன்படி இந்த மாத இறுதிக்குள் அனைத்து அமெரிக்க படைகளும் வெளியேற உள்ளன. தற்போது மிக குறைந்த எண்ணிக்கையில் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் உள்ளது.

கைப்பற்றி வருகிறது
அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய நிலையில் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் வேகமாக கைப்பற்றி வருகின்றன. ஒவ்வொரு கிராமமாக பிடிக்க தொடங்கிய தாலிபான்கள் தற்போது ஆப்கானிஸ்தான் முழுக்க கைப்பற்றும் நிலைக்கு சென்றுள்ளது. ஆப்கானிஸ்தானின் முக்கியமான மாகாணங்கள் எல்லாம் தற்போது தாலிபான்கள் வசம் வந்துவிட்டது, அதிலும் கடந்த இரண்டு வாரங்களில் தாலிபான்கள் இரண்டு மடங்கு வேகத்தில் ஆப்கானிஸ்தானில் வென்று வருகிறது. ஆப்கான் படைகள் எவ்வளவு முயன்றும் தாலிபான்களை கட்டுப்படுத்த முடியவில்லை. சர்வதேச உதவி கிடைக்காத காரணத்தால் இங்கு ஆப்கான் படைகள் வேகமாக வீழ்ந்து வருகிறது. காபூலில் சில முக்கிய பகுதிகள், இஸ்லாம் குவாலா, அபு நாசர் பராஹீ போர்ட், தோர்குந்தி, சராஞ் போன்ற எல்லையோர பகுதிகள் தாலிபான்கள் வசம் சென்றுவிட்டது.

இன்று காலை
இதுபோக கந்தகார், மஸார் இ ஷெரிப் போன்ற முக்கிய நகரங்களில் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது. இன்று காலையில் ஜலாலாபாத் பகுதியை தாலிபான்கள் கைப்பற்றின. ஆப்கான் படைகளின் எந்த எதிர்ப்பும் இல்லாமல் எளிதாக தாலிபான் படைகள் ஜலாலாபாத்தை கைப்பற்றியது. இது காபுலையும் பாகிஸ்தானையும் இணைக்கும் முக்கிய நகரம் ஆகும். ஆப்கானிஸ்தானின் முக்கியமான மாகாணங்களில் ஒன்று நகர்கார். இந்த மாகாணத்தின் தலைநகர்தான் ஜலாலாபாத். மிக மிக முக்கியமான பகுதியாக பார்க்கப்பட்ட இந்த இடம் தாலிபான்கள் வசம் சென்றது.

அனைத்து பகுதிகளில் இருந்தும்
காபுல் மட்டுமே மிச்சம் இருந்த நிலையில் அதன் எல்லைக்குள் தாலிபான்கள் நுழைந்தன. காபுலை சுற்றி தாலிபான்கள் இன்று சுற்றி வளைத்தன. இதனால் இன்னும் இரண்டு நாட்களுக்குள் தாலிபான் படைகள் காபுலை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 6 மணி நேரங்களுக்குள் தாலிபான்கள் தற்போது காபுல் எல்லைக்குள் சென்றுள்ளது. அனைத்து எல்லைகள் வழியாகவும் உள்ளே வந்த தாலிபான் படைகள் காபுல் எல்லைகளுக்குள் தற்போது குவிந்துள்ளன. காபுல் எல்லையில் இருக்கும் கேட்டுகளை கடந்து தாலிபான்கள் உள்ளே சென்றுள்ளது. காபுல் எல்லை கட்டுப்பாட்டு பகுதிகள் தற்போது தாலிபான்கள் வசம் சென்றுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தலிபான் கருத்து என்ன?
ஆனால் தாலிபான்கள் மேற்கொண்டு உள்ளே செல்லாமல் அமைதி காத்தது. இது தொடர்பாக தாலிபான்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் எல்லைக்குள் இருக்கிறோம். ஆனால் மேற்கொண்டு செல்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். அமைதியான முறையில் காபுலை பிடிப்பதே எங்களின் விருப்பம். அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும். காபுலில் யாரையும் தாக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஒரு அப்பாவி ஆப்கானிஸ்தான் நபரை கூட நாங்கள் தாக்க விரும்பவில்லை. நாங்கள் அமைதி காத்து வருகிறோம். ஆனால் போரை நிறுத்தவில்லை. முறையான உத்தரவும் வந்ததும் நகருக்குள் செல்வோம் என்று தெரிவித்தது.

எதிர்ப்பே இல்லை
ஆப்கானிஸ்தான் தலைநகருக்குள் சென்ற தாலிபான் படைகளுக்கு எந்த விதமான எதிர்ப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. எல்லையில் தாலிபான் படைகளுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. அங்கு இருக்கும் மக்கள் அவர்களை பெரிதாக எதிர்க்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலான நகரங்களில் இதுவே நிலவரமாக இருந்தது. ஆப்கானிஸ்தான் கவர்னர்கள் பலர் தாலிபான்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். இதனால் பெரும்பாலான மாகாணங்களில் தாலிபான் படைகளிடம் ஆப்கான் படைகள் சரண் அடைந்தது. இதன் காரணமாக சண்டையே நடக்காமல் பல்வேறு நகரங்கள் தாலிபான்களிடம் வீழ்ந்தது.

கதி என்ன?
இந்த நிலையில்தான் தற்போது காபுலுக்குள் தாலிபான் படைகள் சென்றுள்ளது. அங்கு அதிபர் மாளிகையில் ஆட்சி மாற்றம் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் அஷ்ரப் கானி பதவி விலகியதாக தகவல்கள் வருகின்றன. அதோடுஆப்கன் துணை அதிபர் அம்ருல்லா சலே நாட்டை விட்டு வெளியேறப் போவதாக தகவல் வந்தது. மேலும் தாலிபான் பதவி ஏற்கும் வரை அமைச்சர்அலி அஹமத் ஜலாலி இடைக்கால அதிபராக இருப்பார் என்றும் கூறப்பட்டது.

அமெரிக்க வெளியேற்றம்
அஷ்ரப் கானி பதவி விலக வேண்டும் என்று தாலிபான்கள் தீவிரமாக கோரிக்கை விடுத்து வந்தன. இதனால் கானி ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற வாய்ப்புகள் உள்ளன. அதோடு அமெரிக்க தூதரக அதிகாரிகள், படைகள் காபுலில் இருந்து வேகமாக வெளியேறி வருகிறது. ஆப்கான் படைகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் ஆட்சியை கைப்பற்றும் என்பதால் அங்கிருந்து அமெரிக்க அதிகாரிகள், அவர்களுக்கு துணையாக இருந்தவர்கள் வெளியேறி வருகிறார்கள்.

வெளியேற்றம்
இந்த நிலையில் பதவியை ராஜினாமா செய்த அதிபர் அப்சர் கானி தஜிகிஸ்தான் நாட்டுக்கு தப்பி சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இவர் வெளியேற தாலிபான்கள் அனுமதி அளித்ததால் பாதுகாப்பாக அவர் நாட்டை விட்டு வெளியேறியாதாக கூறப்படுகிறது. காபுல் வீழ்ந்துவிட்டதால் மொத்தமாக ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் சென்றுள்ளது. இதனால் அங்கு விரைவில் தாலிபான்கள் முறையாக ஆட்சி அமைக்கும் அறிவிப்பை வெளியிடும்.












Click it and Unblock the Notifications