அமெரிக்க பொருட்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரிகள்: இன்று முதல் அமல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக கொள்கைக்கு எதிராக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன.
2.8 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகள் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நீல ஜீன்ஸ், மோட்டார் சைக்கிள்கள், போர்போன் விஸ்கி போன்ற பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம் மீது அமெரிக்கா விதித்துள்ள விதிகள் "அனைத்து தர்க்கம் மற்றும் வரலாற்றுக்கு" எதிராக இருப்பதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவரான ஜோன் கிளவுட் ஜங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் எஃகு பொருட்கள் மீது 25% மற்றும் அலுமினியப் பொருட்கள் மீது 10% என்று வரிவிதிப்பதாக கடந்த மார்ச் மாதம் டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
முன்னதாக, இந்த முடிவினை ஜங்கர் கடுமையாக விமர்சித்திருந்தார். இது தொடர்பாக வியாழக்கிழமையன்று பேசிய அவர், "இந்த வரி விதிப்பு தர்க்கத்திற்கு எதிராக உள்ளது. எங்களின் பதில் நடவடிக்கை தெளிவாக ஆனால் சரியான அளவில் இருக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.
டப்ளின் பாராளுமன்றத்தில் பேசிய அவர், "நாம் இதனை சமன் செய்யவும், ஐரோப்பிய ஒன்றியத்தை பாதுகாக்கவும் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்வோம்" என்று கூறினார்.
- அமெரிக்காவின் வரிக்கு போட்டியாக வரி விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்
- சீனப் பொருள்கள் மீது 25 சதவீத வரி விதித்தது அமெரிக்கா
புகையிலை, ஹார்லி டேவிட்ஸன், மோட்டார் சைக்கிள்கல், கிரான்பெரிகள் மற்றும் பீனட் பட்டர் போன்ற அமெரிக்க பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், காலணிகள், சில துணிமணிகள் மற்றும் வாஷிங் மெஷின்கள் போன்ற பொருட்களுக்கு 50% வரியை ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையேயான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த வர்த்தகப் போர் எவ்வாறு தொடங்கியது?
பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ஸ்டீல் மற்றும் அலுமினியப் பொருட்கள் மீது வரி விதிக்கப்படும் என்று மார்ச் மாதம் டிரம்ப் அறிவித்தார்.
எஃகு மற்றும் அலுமினியம் ஆகியன உலக அளவில், முக்கியமாக சீனாவால், அதிகமாக விநியோகிக்கப்படுவதால், அமெரிக்க ஸ்டீல் மற்றும் அலுமினிய உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாக அவர் கூறினார்.
அந்த அறிவிப்பு வெளியானது முதல் தென்கொரியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் உலோகங்களின் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்க ஒப்புக்கொண்டன.
எனினும், ஜூலை 1 முதல் 16.6 பில்லியன் கனட டாலர் மதிப்பிலான அமெரிக்க சரக்குகள் மீது வரி விதிக்கப்படும் என்று கனடா அறிவித்தது.
இரு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து வரும் ஸ்டீல், பன்றி இறைச்சி உள்ளிட்ட பொருட்கள் மீது மெக்சிகோ வரி விதித்தது.
பிற செய்திகள்:
- அமெரிக்க குடியேறிகள் பிரச்சனை: 52 இந்தியர்களின் நிலை என்ன?
- பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்துகொண்ட கால்பந்து ரசிகர்
- "சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை: 15 சதவீதம் விவசாய நிலங்கள் பயன்படுத்தப்படும்"
- எந்த உணவை எவ்வளவு சாப்பிடவேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?