ஆட்டம் காட்டும் சீனா.. இந்திய ஆட்டோமொபைல் துறை எடுத்த முக்கிய முடிவு! இனி சிக்கல் வராது
டெல்லி: மின்சார வாகன தயாரிப்பில் பூமியிலிருந்து எடுக்கப்படும் அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்களின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது. ஆனால் உலகம் முழுவதும் இந்த கனிமங்கள், காந்தங்கள் விநியோகத்தை 92% அளவுக்கு சீனா கட்டுப்படுத்தி வைத்திருப்பதால், இந்திய ஆட்டோமொபைல் துறை பாதிக்கப்பட்டது. எனவே புதிய வகையில் வாகனங்களை உற்பத்தி செய்ய இந்திய நிறுவனங்கள் முடிவெடுத்திருக்கின்றன.
மின்சார வாகனமாக இருந்தாலும் சரி, இதர எரிபொருளில் இயங்கும் வாகனங்களாக இருந்தாலும் சரி, அதை தயாரிக்க மேற்சொன்ன கனிமங்களும், காந்தங்களும் அவசியமாகும். சமீபத்தில் அமெரிக்காவுக்கும்-சீனாவுக்கும் இடையே பஞ்சாயத்து வந்தபோது, இந்த காந்த ஏற்றுமதியை சீனா முற்றிலுமாக நிறுத்தியது.

இது இந்திய ஆட்டோமொபைல் துறையை கடுமையாக பாதித்தது. ஜூன் மாதத்தில் நம்மிடம் இருக்கும் அத்தனை இருப்பும் தீர்ந்துவிடும் என்றும், எனவே உடனடியாக கனிமங்கள், காந்தங்களை போதிய அளவுக்கு சீனாவிடமிருந்து பெற்று தர வேண்டும் என மஹிந்திரா, டாடா உட்பட பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தன. சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த மத்திய அரசு, விரைவில் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக சீனா கூறியிருக்கிறது என்கிற குட்நியூஸை சொல்லியிருந்தது.
ஆனால், இன்னைக்கு பஞ்சாயத்து முடிந்து இயல்பு நிலை திரும்பியிருக்கலாம். மீண்டும் அரிய கனிமங்களையும், காந்தங்களையும் சீனா ஆயுதமாக பயன்படுத்தாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்க முடியும்? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. எனவே, இந்த கனிமங்கள், காந்தங்கள் இல்லாமலேயே வாகனங்களை உற்பத்தி செய்வது என இந்திய ஆட்டோமொபைல் துறை முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2027 முதல் சீனா உதவி இல்லாமல் மின்சார வாகனங்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன.
இதற்கான புதிய வழிமுறைகளை கண்டறியும் வேலைகளில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தீவிரமாக இறங்கியுள்ளன. இதில் சில சிக்கல்களும் இருக்கத்தான் செய்கின்றன. மாற்று வழிகளில் தயாரிக்கப்படும் வாகனங்கள், சந்தையில் எந்த அளவுக்கு போட்டியிட்டு நிலைத்து நிற்கும் என்பது கேள்விக்குறி. உதாரணத்திற்கு டெஸ்லாவின் சைபர் டிரக் மற்றும் சீனாவின் பிஒய்டி நிறுவனத்தின் கார்களை எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டில் விலை குறைவானது பிஒய்டி கார்தான்.
விலை குறைவு, மைலேஜ் அதிகம், மற்ற சிறப்பம்சங்களும் இருக்கின்றன. உலகத்தரம் வாய்ந்த டிசைன் என எல்லா அம்சங்களிலும் பிஒய்டி அசத்துகிறது. இதனால் உலகம் முழுவதும் டெஸ்லா காருக்கு இருந்த மவுசு குறைந்திருக்கிறது. விற்பனையும் கடுமையாக அடிவாங்கி இருக்கிறது.
இதேபோல அரிய கனிமங்கள் இல்லாமலும், காந்தங்கள் இல்லாமலும் நாம் காரை உற்பத்தி செய்கிறோம் எனில், அது சந்தையில் சீன கார்களை எதிர்த்து நின்று வெற்றி பெறுமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் இந்திய தயாரிப்புகள் உலக தரத்தில் இருப்பதால் இந்த சவால்களை நம்மால் எதிர்கொள்ள முடியும். அதேபோல, சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க சர்வதேச அளவில் பல நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன. அந்த நாடுகளுடன் கூட்டு சேர்ந்து ஆராய்ச்சி செய்தால் நிச்சயம் நமக்கு இதற்கான தீர்வு கிடைக்கும்.
எதிர்பார்ப்பதை போல 2027ல் சீனாவின் உதவி இல்லாமல் சர்வதேச தரத்திற்கு நம்மால் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும் என்று ஆட்டோமொபைல் துறையை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications