வேலையை விட்டு துரத்திய ஹெச்ஆர்.. தேடி கொலை செய்த முன்னாள் ஊழியர்.. ஷாக் சம்பவம்.. அதிர்ச்சி தண்டனை
பாரீஸ்: தன்னை வேலையிலிருந்து நீக்கியதற்காக மனித வள மேலாளர்களை (HR) முன்னாள் ஊழியர் ஒருவர் தேடி சென்று கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை கொடுத்திருக்கிறது.
உலகம் முழுவதும் வேலை வாய்ப்பு என்பது பெரும் சவாலானதாக இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வேலையிலிருந்து துரத்தப்படலாம் என்கிற சூழல் நிலவுகிறது. இதே போன்ற ஓர் சூழலை எதிர்கொண்டவர்தான் கேப்ரியல் ஃபோர்டின் எனும் 48 வயதான நபர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி பிரான்சின் அல்சேஸ் பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தின் கார் பார்க்கிங்கில் மனித வள மேலாளர் எஸ்டெல் லூஸ் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.

அதேபோல அன்று மாலை அங்கிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள இன்னொரு இடத்தில், மற்றொரு மனிதவள மேலாளரும் சடலமாக மீட்கப்பட்டார். இந்த இரண்டு சம்பவங்களும் பிரான்ஸ் முழுவதும் பேசு பொருளானது. அன்றிலிருந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் கடைசி சடலம் கண்டெடுக்கப்பட்டதிலிருந்து சுமார் 500 கி.மீ தொலைவில் உள்ள வேலன்ஸ் நகரில் மூன்றாவது நபர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். காவல்துறையினர் இந்த சடலத்தை பார்வையிட்டுக்கொண்டிருந்த போதே சில கி.மீ தொலைவில் மற்றொரு சடலம் கிடப்பதாக தகவல்கள் வந்தன.
இப்படியாக அடுத்தடுத்த சடலங்கள் போலீசாரை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. விசாரணையில் கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஏதோ ஒரு நிறுவனங்களில் உயர் பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள்தான். ஆனால் இவர்களுக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த எதிரிகளும் கிடையாது. இப்படி இருக்கையில் ஏன் இவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. எனவே இவர்கள் நிறுவனத்தில் பணி செய்த ஊழியர்களின் பட்டியலை காவல்துறை தயாரித்தது.
இதில் இவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே ஓர் ஒற்றுமை இருந்தது. அதாவது ஒரேயொரு ஊழியர் மட்டும் கொலை செய்யப்பட்ட நபர்கள் அதிகாரிகளாக இருந்த அனைத்து நிறுவனங்களிலும் வேலை செய்திருக்கிறார். அந்த ஊழியர்தான் கேப்ரியல் ஃபோர்டின். எனவே போலீஸ் அவரை தேட தொடங்கியது. எதிர்பார்த்ததை போலவே அவர் தலைமறைவாக இருந்திருக்கிறார். இருப்பினும் நீண்ட தேடுதலுக்கு பின்னர் அவரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். வழக்கு விசாரணையில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இவரிடம் மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது, அவர் கடந்த 2006ம் ஆண்டிலிருந்து பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்த நிறுவனங்களிலிருந்து அவர் வெளியேற்றவும்பட்டிருக்கிறார். இப்படியாக அவர் எந்தெந்த நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்பட்டாரோ, அந்த நிறுவனங்களின் மனித வள மேலாளர்கள்தான் தற்போது கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

இவருடன் பணி செய்த சக ஊழியர்களிடம் விசாரித்ததில், கேப்ரியல் ஃபோர்டின் எப்போதும் ஒருவித இறுக்கத்துடன்தான் வேலை பார்த்து வந்ததாகவும், இந்த இறுக்கம்தான் அவரை கொலை வரை கொண்டு சென்றிருக்கும் என்று கூறுகின்றனர். மனித வள மேலாளர் இவரிடம் கண்டிப்புடன் நடந்துக்கொண்டதுதான் இந்த இருக்கத்திற்கு காரணம் என்றும் கூறியுள்ளனர்.
வேலையிலிருந்து தன்னை நீக்கிய HR-களை தேடி தேடி சென்று கொலை செய்துள்ள சம்பவம் பிரான்சிஸ் பேசுபொருளாகியுள்ளது. தற்போது இந்த வழக்கில் வாலன்ஸ் நகரின் நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனையை வழங்கியுள்ளது. இவர் 22 ஆண்டுகள் கடுங்காவல் சிறையை அனுபவிப்பார்.












Click it and Unblock the Notifications