‘தடை’ மருந்துகள் வழங்கிய வழக்கு... இந்திய பெண் டாக்டர் குற்றவாளி என அமெ. கோர்ட் தீர்ப்பு!
நியூயார்க்: தடை செய்யப்பட்ட மருந்துகளை நோயாளிகளுக்கு சரமாரியாக வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்தியப் பெண் மருத்துவர் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தியப் பெண் மருத்துவரான நிபேதித்தா மொகந்தி, கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2013 வரை அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஸ்டாபோர்டு மருத்துவமனையில் மருந்துகள் பிரிவுத்தலைவராக பணியாற்றி வந்தார்.
இவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் உயிரிழந்ததால் பிரச்சினையில் சிக்கினார் நிபேதித்தா. விசாரணையில், அவர் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட ஆக்சிகோடோன், பெண்டான் உள்ளிட்ட மருந்து வகைகளை நாள்பட்ட வலிகளால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு வழங்கியது கண்டு பிடிக்கப்பட்டது.
இவர் வழங்கிய மருந்துகள் தடை செய்யப்பட்டவை என்பதோடு அல்லாமல் அவை தொடர்ந்து பயன்படுத்துவோரை அடிமையாக்கி விடும் அபாயமும் கொண்டதாகும்.
இது தொடர்பாக டாக்டர் நிபேதித்தா மொகந்தி மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு அவரது மருத்துவ உரிமத்தை விர்ஜீனியா மருத்துவ வாரியம் தடை செய்தது. மேலும் அவர் மீது அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
நிதி மோசடி, சுகாதார மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டாக்டர் நிபேதித்தா குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் அவருக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டு சிறை முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications