போலிச் செய்திகளை தடுக்க ஃபேஸ்புக் நடவடிக்கை.. அமெரிக்காவில் அமலுக்கு வந்தது!
மென்லோ பார்க்(யு.எஸ்): அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலரி க்ளிண்டனின் தோல்விக்கு ஃபேஸ்புக் மூலம் பரப்பப் பட்ட போலியான தகவல்களும் முக்கிய காரண்மாக கூறப்பட்டது.
அதையடுத்து போலித் தகவல்களை / செய்திகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஃபேஸ்புக் நிறுவனம் முடுக்கி விட்டது.
தற்போது முதல் கட்ட நடவடிக்கையை அமல்படுத்தி உள்ளார்கள். Disputed News என்ற புதிய குறியீடு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
தகவல்கள் / செய்திகளை disputed என்று குறிப்பிடும் வகையில் பயனாளர்களுக்கு வசதி செய்து தரப்பட்டுள்ளது. Disputed செய்திகளை சரி பார்ப்பதற்கென்று தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் Snopes, Politifact, and Factcheck.org உள்ளிட்ட நிறுவனங்கள், அமைச்சர்கள், அதிபர் மற்றும் அரசியல்வாதிகள் கூறும் தகவல்களின் உண்மைத் தன்மையை சரிபார்த்து உடனுக்குடன் வெளியிட்டு வருகிறார்கள்.
ஃபேஸ்புக் நிறுவனம் இந்த மூன்று நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. பயனாளார்கள் disputed என்று குறிப்பிடும் செய்திகளை இந்த நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கும் தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
செய்திகளைச் சரிபார்த்து அதன் உண்மைத் தன்மையை கண்டறிந்து பொய்யான தகவல் என்றால் Disputed by Snopes ,Politfact என்று குறியீடு செய்தியின் அடியில் பளிச்சென்று இடம் பெறும் இந்தச் செய்தியை போஸ்ட் அல்லது ஃபார்வர்ட் செய்தால், disputed news என்று பயனாளர்களுக்கு நினைவு படுத்தும். ஆனாலும் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள முடியும்.
ஒவ்வொருவருடைய Forward செய்யப்பட்ட செய்தியின் அடியிலும் disputed குறியீடு இருந்து கொண்டே இருக்கும்.
ஃபேஸ்புக்கின் பயன்பாடு அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்ட நிலையில், தவறான தகவல்களை பரப்புவர்களை கண்காணிக்கவும் ஃபேஸ்புக் நடவடிக்கை எடுக்கக் கூடும். சமூகவெளித் தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரவுவதை தடுக்க ஃபேஸ்புக்கின் இந்த முயற்சி வரவேற்கத் தக்கதாகும்.
இந்தியாவில் இது சாத்தியமாகுமா?. உண்மையை சரிபார்த்துச் சொல்லும் நிறுவனங்கள்/அமைப்புகள் இருக்கிறதா என்ன?
-இர தினகர்