லைக், ஷேர்லாம் பண்ணாதீங்க... அப்பறம் டைவர்ஸ்தான்... பேஸ்புக்கால் அதிகரிக்கும் விவாகரத்துகள்!
உலகில் நடக்கும் விவாகரத்துகளில் அதிகளவு விவாகரத்து பேஸ்புக் காரணமாக மட்டுமே நடப்பதாக டெய்லி மெயில் என்ற இணையதளம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
நியூயார்க்: உலகில் நடக்கும் விவாகரத்துகளில் அதிகளவு விவாகரத்து பேஸ்புக் காரணமாக மட்டுமே நடப்பதாக டெய்லி மெயில் என்ற இணையதளம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவலையும், புள்ளிவிவரங்களையும் தனது இணையப்பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது.
அமெரிக்காவில் மட்டும் இல்லாமல் இந்தியா முதற்கொண்டு உலகில் உள்ள பெரும்பான்மை நாடுகளில் நடக்கும் விவாகரத்துகள் அனைத்திற்கும் பேஸ்புக்கே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விரிவான பல தகவல்களை அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. இவற்றில் உள்ள விவரங்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடியதாக இருக்கிறது.
பொதுவான விவாகரத்துக்களுக்கான காரணம்
பொதுவாக உலகில் பெரும்பாலான நாடுகளில் திருமணம் ஆன ஆணும் பெண்ணும் பரஸ்பரமாக பிரிவதற்கு நிறைய சட்டப்பூர்வமான வழிகளை நீதிமன்றங்கள் ஏற்படுத்தி இருக்கின்றன. இதுவரை பெரும்பாலும் விவாகரத்துகளுக்கு குறிப்பிட்ட சில காரணங்களே சொல்லப்பட்டு வந்து இருக்கின்றன. குடிப்பழக்கம், சண்டை, வரதட்சணை, சந்தேகப்படுதல், குழந்தையின்மை என அனைத்து நாடுகளிலும் காரணங்கள் ஒன்றாகவே இருந்திருக்கின்றன. இந்த நிலையில் தற்போது இந்த இடத்தை பேஸ்புக்கும் பிடித்துள்ளது.
பேஸ்புக் பற்றிய கோர்ட்டில் புகார்
இதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன் மும்பையில் ஒரு பெண்மணி தன்னுடைய கணவனிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருக்கிறார். மிகவும் சாதாரண விவாகரத்து வழக்காக கடந்து செல்லப்பட வேண்டிய வழக்கு இது. ஆனால் இதில் அவர் குறிப்பிட்ட காரணம் அனைவரையும் அந்த வழக்கை திரும்பி பார்க்க வைத்தது. இதில் அவர் ''என் கணவர் அதிகமாக பேஸ்புக் உபயோகப்படுத்துகிறார் , அவருக்கு என்னுடன் திருமணம் ஆனதை இது வரை பேஸ்புக்கில் அப்டேட் செய்யாமலும் இருக்கிறார்'' என்று புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் அதிக அளவில் பிரபலம் ஆனது. ஆனால் உலகில் இதுபோல் நிறைய பேர் பேஸ்புக்கை காரணம் காட்டி விவாகரத்து வாங்குவதாக கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.
பேஸ்புக்கும் காரணம்
இதுகுறித்த புள்ளிவிவரங்களை டெய்லி மெயில் நிறுவனம் வெளியிட்டது. இதில் உலகில் இதுவரை கொடுக்கப்பட்டுள்ள விவாகரத்து கடிதங்களில் பல கடிதங்கள் பேஸ்புக்கை காரணமாக தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் இதுவரை வெளியாகியுள்ள கணக்கின்படி மட்டும் உலகில் 5000 பேர் பேஸ்புக்கை காரணம் காட்டி விவாகரத்து கேட்டுள்ளதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. இந்த சதவிகிதம் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் தான் அதிகம் இருப்பதாக கூறியுள்ளது.
பேஸ்புக்கின் பிரச்சனை
மேலும் அந்த இணையதளம் பேஸ்புக் எந்த வகையில் இது போன்ற விவாகரத்துக்கு காரணமாக இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளது. அதில் அதிக நேரம் பேஸ்புக்கில் இருப்பது, மற்ற பெண்களுக்கோ, ஆண்களுக்கோ லைக், கமெண்ட் இடுவது, அதிக நேரம் சாட் செய்வது, தெரியாத நபர்களை நண்பர்களாக வைத்துக் கொள்வது, திருமணம் ஆனதை பேஸ்புக்கில் மறைப்பது என நிறைய காரணங்களை அடுக்கியுள்ளது. இதுவரை விண்ணப்பிக்கப்பட்டுள்ள பேஸ்புக் சார்ந்த விவாகரத்து வழக்கில் எல்லாம் இதுவே காரணமாக கூறப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.