கூகுளுக்கு போட்டியாக கோதாவில் குதித்த பேஸ்புக்! செய்திகளை போஸ்ட் செய்யப்போகிறதாம்!
வாஷிங்டன்: பேஸ்புக்கிலேயே செய்திகளை வாசிக்கும் அனுபவத்தை வாசகர்களுக்கு அளிப்பதற்காக, முன்னணி மீடியா நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது பேஸ்புக் நிறுவனம்.
இணையதளம் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர், பேஸ்புக்கே கதியாக இருப்பவர்கள். எனவே, பல்வேறு மீடியா நிறுவனங்களும், அதிலும் குறிப்பாக ஆன்லைன் மீடியா நிறுவனங்கள், பேஸ்புக் பக்கங்களை வைத்துள்ளன. அதில் செய்தியை வெளியிட்டு, முழு செய்தியை படிக்க அதன் 'லிங்கை' இணைத்துவிடுகின்றன.

செய்தி பிடித்திருந்தால், லிங்க் மூலமாக, தங்களது ஆன்லைன் பக்கத்திற்கு வாசகர்கள் வருவார்கள் என்பது மீடியாக்களின் நோக்கம். ஆனால் இதில் ஒரு சிறு பிரச்சினை என்னவென்றால், லிங்கை கிளிக் செய்து உள்ளே செல்ல சுமார் 8 வினாடிகளாவது நேரம் பிடிக்கிறது. அந்த அளவுக்கும் பொறுமையில்லாத வாசகர்கள் எண்ணிக்கை இப்போது அதிகமாகிவிட்டது. அதிலும், செல்போனில் பேஸ்புக் பார்ப்போர், இந்த கால விரையத்தை சகித்துக்கொள்ள முடியாதவர்களாக உள்ளனர்.
இதை கருதித்தில் கொண்டு, செய்தி இணையதளத்தில் இடம்பெறும் முக்கிய செய்திகளை, போஸ்ட் வடிவில் பேஸ்புக் பிரசுரிக்க திட்டமிட்டுள்ளது. எனவே, லிங்கை கிளிக் செய்யாமல், பேஸ்புக் செய்தி போஸ்டிலேயே பிரபல இணையதளங்களின் செய்திகளை பார்த்துக்கொள்ள முடியும்.
மேலைநாட்டு ஆங்கில ஊடகங்களில் இருந்து இந்த திட்டத்தை ஆரம்பிக்க உள்ளது பேஸ்புக். இதற்காக, நியூயார்க் டைம்ஸ், நேஷனல் ஜியாகிரபிக், பஸ்ஃபீட், ஹஃபிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட ஆறு ஊடகங்களிடம் பேஸ்புக் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதனால் ஆன்லைன் ஊடகங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. பேஸ்புக்தான் முழு நன்மையையும் பெறப்போகிறது என்பதால், இதுவரை எந்த ஊடகமும் பேஸ்புக் யோசனைக்கு செவி சாய்க்கவில்லை. எனவே அடுத்தகட்ட பேச்சுவாரத்தை நடந்து வருகிறது.
பேஸ்புக்கிற்கு 1.6 பில்லியன் பயனாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் நிறுவனத்தின் செய்திப் பிரிவுக்கு சென்று நடப்பு செய்திகளை பார்க்கும் வாசகர்களுக்கும், இனிமேல் பேஸ்புக்கிலேயே அந்த வசதி கிடைத்துவிடும் வாய்ப்பு உள்ளதால், கூகுளுக்கு இது பின்னடைவாக இருக்கும்.












Click it and Unblock the Notifications