மலேசிய விமான தகர்ப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறுபேர் பலியான பரிதாபம்
கோலாலம்பூர்: மலேசிய விமான விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறுபேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கஜகஸ்தானில் இருந்து நான்கு குழந்தைகள், மனைவியுடன் மலேசியா திரும்பிய நபரின் குடும்பம்தான் இந்த கொடூர சம்பவத்தில் பலியாகிவிட்டது.
பல நாட்டு பயணிகள்
உக்ரைனின் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் பயணித்த 295 பேரும் பலியாகினர். அதில் பல நாட்டை சேர்ந்த பயணிகளும் அடக்கம்.
ஒரே குடும்பத்தில் ஆறுபேர்
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறுபேர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெயர் விவரம்
இறந்தவர் பெயர்கள், தம்பி ஜியீ (49), அவரது மனைவி அரிஜா (47), குழந்தைகள், முகமது ஆஃபீப் (19), முகமது அப்சல் (17), மர்ஷா அஜ்மீனா (15), முகமது அஃப்ருஸ் (13), ஆகியோர் என்று தெரியவந்துள்ளது.
சொந்த ஊர் சென்றபோது பரிதாபம்
கஜகஸ்தானில் இருந்து ஆம்ஸ்டர்டாம் வழியாக அவர்கள், மலேசியாவிலுள்ள குச்சிங் சிட்டிக்கு சென்றபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளாக தம்பி ஜியீ கஜகஸ்தானில் பணியாற்றி வந்தார். சொந்த ஊருக்கு செல்லும் வழியில் குடும்பத்தோடு இறந்துவிட்டார்.
உறவினர்கள் அதிர்ச்சி
குடும்பத்தில் ஒருவரும் உயிர் தப்பாத நிலையில், இந்த சம்பவத்தால் அவரது உறவினர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.