லண்டனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் மர்ம மரணம்
லண்டன்: கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் லண்டனில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் மனைவியையும் இரட்டை குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தந்தை தூக்கு போட்டு தற்கொலை கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
கிழக்கு லண்டனில் உள்ள சட்வெல் ஹீத் பகுதியில்தான் அதிர்ச்சிகரமான இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நபரின் பெயர் புல்லர்கட்டில் ரித்திஷ்குமார் என்பதாகும். இவரின் மனைவி பெயர் ஷகி, மற்றும் பிள்ளைகளான நியா, நேகா.

நியா, நேகா ஆகியோர் இரட்டை குழந்தைகள் ஆவர். இவர்கள் திங்கட்கிழமை முதல் பள்ளிக்குச் செல்லவில்லை. இது குறித்து பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வீட்டிற்கு சென்று கதவை போலீசார் தட்டிப் பார்த்துள்ளனர். திறக்காத காரணத்தினால் கதவை உடைத்துக்கொண்டு பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அங்கு மூவரின் சடலமும் இருந்துள்ளது.
அவர்களின் உடலில் எந்த விதமான காயமும் தென்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ரித்தீஷ் குமாரை போலீசார் தேடிவந்த நிலையில் வால்டம்ஸ்டொ பகுதியில் உள்ள வுட்போர்ட் நீர்த்தேக்கம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் ரித்தீஷ்குமாரின் சடலத்தை கண்டெடுத்தனர்.
மூவரையும் கொலை செய்துவிட்டு ரித்தீஷ் குமார் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் நம்பப்படுகிறது.
ரித்தீஷ்குமார் குடும்பம் கேரளாவில் இருந்து பிரிட்டனுக்கு இடம் பெயர்ந்த குடும்பம் என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மர்ம மரணம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேதப் பரிசோதனை தற்போது நடைபெற்று வருகிறது. அதில் கிடைக்கும் தகவலை வைத்தே கொலையா, தற்கொலையா என்று தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்கள் பற்றி கூறுகையில், அவர்கள் இங்கு 8 ஆண்டுகளாக வசித்து வந்தனர், மிகவும் அமைதியானவர்களாகவும் மனிதநேயமிக்கவர்களாவும் காணப்பட்டார்கள் என தெரிவித்துள்ளனர். ரித்தீஷ்குமார் சமூக சேவை செய்து வந்தார் என்றும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் இரட்டை குழந்தைகளான நியா, நேகா ஆகியோரைப் பற்றியும் தவறான வதந்தி பரவியது. ஆனால் இதனை அவர்களுடன் படித்து வரும் மாணவர்கள் மறுத்துள்ளனர். இந்த மாணவிகள் இருவரும் அமைதியானவர்கள் யாருக்கும் எந்தவித தொந்தரவும் கொடுக்காதவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த மர்ம மரணம் பற்றி இதுவரை எந்த வித துப்பும் கிடைக்கவில்லை என ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications