ஃபெட்னா 2017: வடஅமெரிக்க தமிழ்ப்பேரவை விழாவில்… சிறப்பு விருந்தினராக ஒரிசா பாலு!
வட அமெரிக்க தமிழ்சங்கமும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 30ம் பேரவைத் தமிழ் விழா வரும் 30ம் தேதி தொடங்குகிறது. அதில் சிறப்பு விருந்தினராக ஒரிசா பாலு கலந்து கொண்டு கடல் சார், நிலம் சார்
மினசோட்டா: வட அமெரிக்க தமிழ்சங்கமும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 30ம் பேரவைத் தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராக ஒரிசா பாலு கலந்து கொண்டு தமிழரின் கடல் சார், நிலம் சார் தமிழர் வரலாற்று உண்மைகளை பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்.
சிவ பாலசுப்ரமணி 1963 ஏப்ரல் மாதம் 7 ஆம் நாள் சிவஞானம் - ராஜேஸ்வரி ஆகியோருக்கு திருச்சி உறையூரில் ஆறாவது மகனாய் பிறந்து, தமிழகத்தின் விழுப்புரம், புதுவை, நெய்வேலி, சென்னை போன்ற பல இடங்களில் வளர்ந்து இயற்பியலில் தேர்ச்சி பெற்று சுரங்கம் மற்றும் வெளிநாட்டுக் கருவிகளை பழுது பார்க்கும் வேலைகள் தொடர்பான பொறியியல் துறையில் பல வருடங்கள் ஒரிசாவில் பணிபுரிந்து அங்கு இருந்து இந்தியா முழுவதும் சுற்றி வந்தவர்.
நீர் மேலாண்மை, காடுகள் மேலாண்மை, மரபு சார் அறிவியல், உழவியல், மொழிகள், பண்பாடு ஒப்பிட்டுவியலில் அதிகம் ஆர்வம் காட்டுபவர். ஒரிசாவில் கனிம வள கண்டுபிடிப்பு ஆய்விற்காக ஆஸ்திரேலிய புவி இயற்பியல் நிறுவனத்தின் செய்மதிகளின் உதவியுடன் விமான மூலமான ஆய்வுகளில் தேர்ச்சி பெற்று அந்த ஆய்வுகளைக் கள ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யும் குழுவில் பணி புரிந்தவர்.
தமிழர்களின் கடல்சார் தொன்மை தொடர்பான ஆய்வுகளைத் தொடர்ந்து செய்து வருபவர் ஒரிசா புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத்தில் துவக்க உறுப்பினராகச் சேர்ந்து, பின் பல பொறுப்புகளில் இருந்து, 2002-2003 செயலர் ஆகப் பணியாற்றி தமிழர்களை ஒரிசாவில் ஒருங்கிணைத்து அவர்களை ஏனைய உலக தமிழ் மக்களோடு நெருங்கிப் பழக வைத்தவர். உலக தமிழ் அமைப்புகளை ஒன்று சேர்க்க ஆர்வம் காட்டி வருபவர்.
ஒரிசாவில் அவர் செய்த கலிங்க தமிழ் தொடர்புகள் மற்றும் தமிழகத்தில் அவர் செய்த தமிழ் - கலிங்க தென் கோசல, ஒட்டர தொடர்பான தமிழியல்ஆய்வுகள் தமிழர்களின் பெருமையை நிலை நாட்டிய செயல் ஆகும்.
ஒரிசா என்ற கிளைகளில் தமிழைத் தேடிய அவர் அவருடைய வெகு நாள் தொழில் நுட்பம் மற்றும் மரபு சார்ந்த பணிகள் தொடர்பால் குமரி கண்டம் மற்றும் லெமுரியா கடல் ஆய்வுகளில் ஈடுபட்டு இன்று மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் கடலில் மக்கள் வாழ்ந்த நிலப் பகுதிகள் என்று செய்மதி, நவீன கடல் சார் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் கடலில் கள ஆய்வு செய்து லெமுரியா குமரிகண்டம், கடல் கொண்ட தென்னாடு, தென் புலத்தார் போன்ற கருதுகோள்களை தமிழ் இலக்கியம் சொன்ன கடல்கோள்கள் செய்திகளின் மூலம் ஒப்பிட்டு கடலில் ஆய்வுகள் பல செய்து அவையின் அடிப்படை உண்மைகள் என்ன என்று கடலில் கள ஆய்வுகள் மூலம் நிருபித்து வருகிறார்.
அதே போல் இனப் பெருக்கத்திற்கு தமிழக ஒரிசா கடற்கரையில் வரும் கடல் ஆமைகள் தொடர்பான இடங்கள் பிற்காலத்தில் துறைமுகமாய் மாற்றப்பட்டதையும், ஆமைகள் நம் கடற்கரைகளை தேடி கடல் நீரோட்டத்தில் வரும் வழிகள், நம்முடைய கடலோடிகளால் பயன் படுத்தப்பட்டு அவர்கள் உலகம் முழுவதையும் வலம் வந்த, ஆமைகள் தொடர்பான இடங்கள் நான்கு ஆயிரத்திற்கு மேற்பட்டு, தமிழ்ப் பெயராலேயே விளங்குவதை ஆய்வுகள் செய்து உறுதி செய்து வருபவர். அந்த இடங்களில் தமிழ் மொழி மற்றும் பண்பாடுகள் இன்றும் இருப்பதை நிரூபித்து வருபவர்.
கடலோடிகளை மீனவர்களை வெறும் பாய்மரத்தில், மீன்பிடிப்பவர்களாக மட்டும் பார்க்காமல் கடல் சுற்று சூழல் அறிவு பெற்றவர்களாக பார்ப்பவர். கடல் வள மேலாண்மையின் உலக நடப்புகளை மீனவர்களுக்குப் பயிற்சி தந்து வருகிறார்.
புவியின் சுழற்சியில் தீபகற்ப பகுதிகளில், தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்கள் அவர்கள் இயற்கையின் பயன்பாட்டை உலகிற்கு முதலில் கடல் மூலமாகச் சென்று அறிமுகப் படுத்தியவர்கள் என்பதை தமிழர்களின் கடல் சார் மேலாண்மை, இரும்பு நாகரிகம், வேளாண்மை நாகரிகம், நெசவு குயவு கட்டிட கலை போன்றவைகளின் மூலம்தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் நிரூபித்து வருபவர்.
ஆழ கடல்மீனவர்கள், நீர் மூழ்கிகள் மற்றும் பாய் மரக் கப்பல் ஓட்டுபவர்களை ஒருங்கிணைத்து பல்வேறு தொழில் நுட்பங்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தி வருபவர். அதே சமயத்தில் அவர்களின் கடல் சார் மேலாண்மையை உலகிற்கு தொலைக்காட்சிகளின் மூலம் அறிமுகப் படுத்தி வருபவர்.
தமிழர்கள் கடல் சார் மரபு மற்றும் சுற்று சூழலைக் காக்க வேண்டு என்பதில் உறுதியாக இருந்து தமிழகம் முழுவதும் காணொளி காட்சிகள் நடத்தி வருபவர். வரலாறு, சங்க கால தமிழ் இலக்கியம் என்பது வருங்கால சமுகத்திற்கு வழிகாட்டிகளாக இருக்கும் என்பது அவருடைய நம்பிக்கை. அதன் மூலம் பல சிக்கல்களை இயற்கை சார் வள மேலாண்மை தீர்த்து கொண்டு வருகிறார்.
நுளையர், முக்குவர், நாவியர், பள்ளர், குடும்பர், ஒட்டர், அளவர், வாதிரியார்களை மற்றும் மென் புல மக்களைப் பற்றிய அவருடைய ஆய்வு முயற்சிகள் தொடருகின்றன. இணைய உலகில் வரலாறு மற்றும் மரபு மற்றும் சுற்று சூழல் தொடர்பான குழுமங்களுடன் நெருங்கிப் பழகுபவர். பல மாணவர்களின் கடல் சார் ஆய்வுகளுக்குத் துணை புரிந்து வருகிறார்.
மீன் வளம் , பாய் மரக் கப்பல், நீர்மூழ்கிகள் , மானுடவியல் , விலங்கு மற்றும் தாவரம் , கடல் சார் தொல்லியல் ,வரலாறு, பண்பாடுகள், ஆமைகள் ஆய்வு, பாறை ஓவியங்கள், இயற்கை சார்ந்தபுவி சுழற்சி தொடர்பாக செய்மதி குழுமம், கடல் சார் குழுமம் மற்றும் ஏனைய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
தற்சமயம் சென்னையில் வசித்து வரும் இவர் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நடுவத்தைத் துவங்கி உலக மக்களுக்கு நம்முடிய தீபகற்ப கடல் சார் மேலாண்மை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர்.
தற்பொழுது மரபு சார் அறிவியல் தொடர்பான ஆய்வுக் கூடத்தில் மாற்று உயிரி எரிபொருள் மற்றும் மரபு சார் மருந்தியல் ஆய்வுகள் சார்ந்த பணியில் முழு நேர இயக்குநராக இருந்து வருகிறார். மேலும் கடல் சூழ்ந்த நாட்டின் முதல் ஆய்வு நீர்மூழ்கிக் கப்பலுக்கான திட்டத்தில் இயங்கி வருகிறார்.
இதுவரை 780 இடங்களுக்கு மேலாகச் சொற்பொழிவுகள் ஆற்றி இருக்கிறார். தொடர்ந்து செயல்பாட்டில் இருந்து வருகிறார். புவியின் சுழற்சியின் மிக மையமான பகுதியில் கடல் சூழ்ந்து உள்ள தமிழர்களின் உலகளாவிய தொன்மைக்குக் காரணமான மெய் இயலை நோக்கிய உலக பயணத்தில் தாய்லாந்து, மலேசியா ஆகிய தென் கிழக்கு ஆசிய நாடுகளின் பயணத்தில் உள்ளார்.