துருக்கி பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து: 11 மாணவிகள் உடல் கருகி பலி
இஸ்தான்புல்: துருக்கியில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 மாணவிகள் உள்பட 12 பேர் உடல் கருகி பலியாகினர்.
துருக்கியின் தென் பகுதியான அதானாவில் இருக்கும் பள்ளி விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் விடுதியில் இருந்த மாணவிகளில் 11 பேர் மற்றும் விடுதி காப்பாளர் பெண் ஆகியோர் உடல் கருகி பலியாகினர்.
அந்த விடுதியில் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஏழை மாணவிகள் 34 பேர் தங்கியிருந்தனர். தீ விபத்தில் 22 பேர் காயம் அடைந்துள்ளனர். விடுதியில் தீ விபத்து ஏற்பட்டவுடன் மாணவிகள் ஜன்னல் வழியாக வெளியே குதித்துள்ளனர்.
இது குறித்து அதானா ஆளுநர் மகமூத் கூறுகையில்,
பள்ளி விடுதியில் இருந்து இதுவரை 12 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் காயம் அடைந்த 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.