ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி உயிரிழந்த 104 பேர் உடல் ஈரான் சென்றது.. அதிபர் ஆவேசம்
டெஹ்ரான்: ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி உயிரிழந்த 104 ஈரானியர் உடல் சொந்த நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த துயர சம்பவத்துக்கு காரணமானவர்களை மன்னிக்கவே மாட்டோம் என்று ஈரான் அதிபர் ருஹானி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செளதியில் ஹஜ் யாத்திரையின் போது மினா நகரில் நெரிசலில் சிக்கி 700க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இவர்களில் ஈரான் நாட்டவர் மட்டும் 463 பேர்.

இதனால் செளதி அரசு மீது ஈரான் கடுமையான கோபத்தில் உள்ளது. இச்சம்பவம் தொடர்பான சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் உயிரிழந்த ஈரானியர்களில் 104 பேரின் உடல்கள் இன்று 9 நாட்கள் கழித்து சொந்த நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. அந்த உடல்களுக்கு ஈரான் அதிபர் ருஹானி உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
அப்போது பேசிய அதிபர் ருஹானி, இந்த துயரமான சம்பவத்துக்கு அதிகாரிகள் காரணம் என்று நிரூபிக்கப்பட்டால் நாங்கள் அவர்களை மன்னிக்க மாட்டோம்.
இந்த விபத்தில் எங்களது மொழி சகோதரத்துவம் மற்றும் மரியாதை சார்ந்தது, ராஜதந்திர மொழியையும் தேவைப்பட்டால் பிரயோகிப்போம். துயரம் குறித்த உண்மையான காரணங்களை அறிய உண்மை அறியும் குழு அமைக்கப்பட வேண்டும்.
செளதி அரேபியா அரசின் முறைகேடான நிர்வாகமும் திறமையற்ற அலட்சிய நிர்வாகமுமே இதற்குக் காரணம். இந்த துயரத்தில் இருந்து அனைத்து இஸ்லாமிய நாடுகளும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்த ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000 முதல் 4,000 வரை இருக்கும் என்றும் ஈரான் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications