ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து முதலில் வெளியேறுக.. ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடியை கொடுத்துள்ளது. ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் முதலில் வெளியேற வேண்டும் என்று இந்தியா ஐ.நா.வில் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், காஷ்மீர மக்கள் இந்தியாவால் ஒடுக்குமுறைக்குள்ளாகின்றனர் எனக் கூறி காஷ்மீர், சியாச்சினில் இருந்து படைகளை விலக்குவது உள்ளிட்ட 4 அம்ச திட்டத்தை முன்வைத்து பேசியிருந்தார்.

இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இந்தியாவின் செயலர் அபிஷேக் சிங் இது குறித்து பேசியதாவது:
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்த சபையில் பேசுகையில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட முதல் நாடு தங்களுடையது என்று குறிப்பிட்டார். உண்மையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வளர்த்துவிடுவதால்தான் இந்த நிலைமை அந்நாடு எதிர்கொள்கிறது.
ஜம்மு காஷ்மீரை வெளிநாடு ஆக்கிரமித்திருப்பதாக நவாஸ் ஷெரீப் குறிப்பிட்டார். உண்மையில் காஷ்மீரை ஆக்கிரமித்திருப்பது பாகிஸ்தான் தான். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் முதலில் உடனடியாக வெளியேற வேண்டும்.
ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய நிலைகள் மீது தாக்குதல்களை நடத்தி தீவிரவாதிகளை ஊடுருவச் செய்கிறது பாகிஸ்தான். சீனா- பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் குறித்து இந்தியா அதிருப்தியை தெரிவிக்கிறது.
ஏனெனில் இந்த வழித்தடமானது பாகிஸ்தானால் பல ஆண்டுகாலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பல பகுதிகளும் இடம்பெறுகின்றன.
ஜம்மு காஷ்மீரில் இருந்து படைகளை படிப்படியாக விலக்கிக் கொள்வது என்ற ஒரு அம்சத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் முன்வைத்துள்ளார். தற்போது தேவை படை விலக்கல் அல்ல; படிப்படியாக பாகிஸ்தான் தீவிரவாதத்தைக் கைவிடுதல் என்பதுதான்.












Click it and Unblock the Notifications