நெஞ்சு பதைபதைக்கிறது.. இதயம் உடைகிறது.. உக்ரைன் அழகியின் உறைய வைக்கும் பேச்சு.. பரபரப்பு!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ‛‛குண்டுவெடிப்பு சத்தத்தில் கண்விழித்து, குண்டுவீச தயாராக ரஷ்ய ஹெலிகாப்டர்கள் தலைக்கு மேலே பறக்க, உயிரை காப்பாற்ற எல்லைகளை நோக்கி ஓடினோம்'' என உக்ரைனில் 2018 ல் அழகி பட்டம் வென்ற வெரோனிகா டிடுசென்கோ கூறினார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் கடும் சேதங்களையும், பல உயிர் பலிகளையும் கண்டு வருகிறது. மேலும் ரஷ்ய வீரர்களும், உக்ரைன் படையினரால் வீழ்த்தப்படுகின்றனர்.
இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் ஐநாவின் மனித உரிமைகள் ஆணைய கணக்குப்படி நேற்று வரை 474 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 861 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யாவின் தாக்குதலில் மொத்தம் உக்ரைனில் 202 பள்ளிகள், 34 மருத்துவமனைகள், 1500 குடியிருப்பு கட்டடங்களை சேதப்படுத்தி உள்ளது. 900க்கும் அதிகமான குடியிருப்புகள் மின்சாரம், குடிநீர் வசதி இன்றி உள்ளன என உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உக்ரைன் அழகி
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதையடுத்து உக்ரைன் நாட்டில் 2018 ல் அழகியாக தேர்வான வெரோனிகா டிடுசென்கோ தனது 7 வயது மகனுடன் தலைநகர் கீவில் இருந்து வெளியேறினார். மால்டோவா, ருமேனியா, லக்சம்பர்க் மற்றும் சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் பெண்கள் உரிமைகள் தொடர்பான வழக்கறிஞர் குளோரியா ஆல்ரெட் என்பவருடன் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

குண்டு சத்தத்தில்...
‛‛பிப்ரவரி 24ல் கீவ்வில் வெடிகுண்டு, ஏவுகணை தாக்குதல் சத்தங்களால் தான் கண்விழித்தோம். 30 லட்சம் மக்கள் வசிக்கும் கீவ்வில் தூங்கி கொண்டிருந்தபோது போர் குறித்து எந்த அறிவிப்பும் இன்றி குண்டுகள் வீசப்பட்டது. உயிருக்கு பயந்து பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் உடனடியாக நகரத்தை விட்டு வெளியேறினோம்.

முதல் அனுபவம்
கீவ்வில் இருந்து வெளியேறும் வழியில் நெடுஞ்சாலையில் பல மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனது தலைக்கு மேலே ஏராளமான ரஷ்ய ஹெலிகாப்டர்கள் பறந்தபடி குண்டுவீச்சில் ஈடுபட்டு கொண்டிருந்தன. என்வாழ்நாளில் வான்வழித்தாக்குதலை முதல் முறையாக பார்த்தேன். எனது மகனுடனான இந்த பயணம் முழுவதும் பயமாகவே இருந்தது. ஏனென்றால் தரையில் குண்டுகள் வெடிக்காத இடங்களே இல்லை.

இதயத்தை உடைக்கிறது
இப்போதும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர். போர் சூழலில் பதுங்கு குழிகளில் பெண்கள் குழந்தைகளை பெற்றெடுக்கின்றனர்.இது இன்னும் என் இதயத்தை உடைக்கிறது. உணவு, தண்ணீர், வெளிச்சமின்றி பொதுமக்கள் இறக்கின்றனர். அதிலும் உக்ரைனை விட்டு வெளியேறும் மக்களை சில நேரம் ரஷ்ய ராணுவம் சுட்டு கொல்கிறது. இது மிகவும் பயங்கரமான செயலாகும். உக்ரைன் நாட்டையும், உக்ரைன் மக்களையும் முழுவதுமாக அழிக்கும் வரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போரை நிறுத்த மாட்டார். இருப்பினும் எங்கள் நாட்டை காக்க தொடர்ந்து நாங்கள் போராடுவோம்'' என்றார்.
Recommended Video

பட்டம் பறிப்பு
டிடுசென்கோ 2018 இல் மிஸ் உக்ரைன் பட்டம் வென்றார். விசாரணையில் அவருக்கு திருமணமாகி குழந்தை இருப்பதும், கணவரிடம் இருந்து அவர் விவாகரத்து பெற்றிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரது பட்டம் பறிக்கப்பட்டு, போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications