போலீசை பார்த்ததும் பதறிய பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்.. காரில் இருந்து இறங்கி ஓட்டம்.. என்னாச்சு?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான் கான் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான ஃபாவத் சவுத்ரி அந்த நாட்டு போலீசாருக்கு பயந்து காரில் இருந்து இறங்கி நீதிமன்றத்திற்குள் ஓடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாகவே சற்று பரபரப்பான சூழல் நிலவுகிறது. ஒருபக்கம் நிதி நெருக்கடியால் தவித்துக் கொண்டு இருக்க அரசியல் நெருக்கடியிலும் அந்த நாட்டு மக்களை விழி பிதுங்க வைக்கிறது. குறிப்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் ரேஞ்சர் படையினர் கைது செய்தனர்.

ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக சென்ற இம்ரான் கானை சுற்றி வளைத்து பிடித்து பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர். இம்ரான் கான் கைதுக்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கொந்தளித்தனர். பயங்கர வன்முறையும் வெடித்தது. எனினும் மறுநாளே இம்ரான் கான் கைது சட்ட விரோதம் என்று அறிவித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தியது.
இதையடுத்து இம்ரான் கான் ஜாமீன் பெற்றார். இம்ரான் கான் கைது செய்யப்பட்ட போது அவரது கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றங்கள் அவர்களுக்கு தற்போது ஜாமீன் அளித்து வருகிறது. அந்த வகையில், இம்ரான் கான் கட்சியை சேர்ந்த ஃபவத் சவுத்ரி என்பவரும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு இருந்தார்.
காவல்துறையினரை மிரட்டியதாகவும் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் ஃபாவத் சவுத்ரி மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஃபாவத் சவுத்ரிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதும் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தனது எஸ்.யூ.வி காரில் ஃபாவத் சவுத்ரி வெளியே வந்தார். காரில் முன்பக்கத்தில் அமர்ந்து இருந்த ஃபாவத் சவுத்ரி, நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே போலீசார் நிற்பதை பார்த்தார். உடனே காரில் இருந்து வேக வேகமாக இறங்கிய ஃபாவத் சவுத்ரி, நீதிமன்ற வளாகத்திற்குள் மீண்டும் இறங்கி ஓடினார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் பரபரப்பு அடைந்தனர்.
மற்றொரு வழக்கில் ஃபாவத் சவுத்ரியை கைது செய்ய போலீசார் வருகை தந்ததால் அச்சப்பட்டு நீதிமன்றத்திற்குள் ஓடியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறிது நேரத்தில் வழக்கறிஞர்கள் புடை சூழ ஃபாவத் சவுத்ரி நீதிமன்ற வளாகத்தில் காணப்பட்டார். காரில் இருந்து ஃபாவத் சவுத்ரி இறங்கிய ஓடிய காட்சிகள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.












Click it and Unblock the Notifications