அடி, உதை, பட்டினி, தலை துண்டிப்பு: ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பித்தவர்கள் கண்ணீர் கதை
சனா: ஈராக்கில் உள்ள சிறை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ள 69 பேர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களை எப்படி எல்லாம் சித்ரவதை செய்தார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
வடக்கு ஈராக்கில் உள்ள ஹுவிஜா நகரில் இருக்கும் சிறையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் பிணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட 35 வயது போலீஸ் அதிகாரி முகமது ஹஸன் அப்துல்லா அல் ஜிபோரி உள்பட 69 பேர் அமெரிக்க படைகளால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகள் பற்றி தெரிவித்துள்ளனர்.

சூரியன்
ஒரு மாத காலமாக நான் சிறையில் இருந்தேன். சூரியனையே பார்க்காமல் இருட்டு அறையில் இருந்தேன். இனிமேல் வெளியே வர முடியாது என்று நினைத்தபோது தான் நான் மீட்கப்பட்டுள்ளேன் என்று அல் ஜிபோரி தெரிவித்துள்ளார்.

தேடாதீர்கள்
தீவிரவாதிகள் எப்படியும் என்னை கொலை செய்துவிடுவார்கள். அதனால் என்னை தேட வேண்டாம். உங்கள் குடும்பத்தாரை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று நான் என் உறவினருக்கு கடிதம் எழுதிய நிலையில் காப்பற்றப்பட்டேன் என போலீஸ் அதிகாரி சாத் கலிப் அலி பராஜ்(32) கூறியுள்ளார்.

அடி, உதை
புதிதாக பிடித்து வரும் கைதிகளை தீவிரவாதிகள் கொடுமை செய்கிறார்கள். அவர்களுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுப்பது, தண்ணீர் பைப்பால் அடிப்பது, பிளாஸ்டிக் பைகளால் முகத்தை இறுக்கி மயக்கமடைய செய்வது, சாப்பாடு கொடுக்காமல் சிறைக் கம்பிகளுக்கு இடையே பிரெட் துண்டுகளை வீசி, கைதிகளை பூட்டிய அறைக்குள் நாள் கணக்கில் அடைத்து வைத்திருப்பது என்று தீவிரவாதிகள் கொடுமைப்படுத்துகிறார்கள்.

டிவி
சிறையில் உள்ள அறைகளில் டிவி உள்ளது. ஆனால் அந்த டிவிக்களில் தீவிரவாதிகள் பிணையக்கைதிகளின் தலையை துண்டிக்கும் காட்சிகள் மட்டுமே ஒளிபரப்பப்படும் என்று அல் பிஜோரி தெரிவித்துள்ளார்.

தலை துண்டிப்பு
தீவிரவாதிகள் அல் பிஜோரி, அவரின் 3 சகோதரர்கள் மற்றும் 80 வயது தந்தையை பிடித்துச் சென்றுள்ளனர். அதில் அவரின் தம்பி மவுபை மட்டும் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். பின்னர் பிஜோரி மற்றும் அவரது குடும்பத்தாரை விடுவிடுத்துள்ளனர். ஆனால் விடுவித்த வேகத்தில் பிஜோரியை மீண்டும் கைது செய்துள்ளனர்.

அமெரிக்கா
என் செல்போனில் அமெரிக்க ராணுவ வீரர்கள் இருவரின் எண்கள் இருந்ததை தீவிரவாதிகள் கண்டுபிடித்துவிட்டனர். அவர்களுடன் தொடர்பு இருப்பதை ஒப்புக் கொண்டால் என்னை கொன்றுவிடுவார்கள். இல்லை என்றால் ஆமாம் என்று கூறும் வரை அடித்து அதன் பிறகு கொலை செய்வார்கள் என்கிறார் பிஜோரி.

குர்து
பராஜின் இரண்டு மனைவிகளில் ஒருவர் குர்து இனத்தைச் சேர்ந்தவர். அதனால் தீவிரவாதிகளுக்கு பராஜ் மீது சந்தேகம் ஏற்பட்டு கைது செய்துள்ளனர். அவரது சகோதரர் மீது சந்தேகப்பட்ட தீவிரவாதிகள் அவரின் தலையை வெட்டி பராஜிடம் அளித்துள்ளனர். ஆனால் உடலை அளிக்கவில்லை.

விவாகரத்து
பெஷ்மெர்கா படையினருக்கு தகவல் அளித்ததாகக் கூறி தான் பராஜை தீவிரவாதிகள் கைது செய்தனர். அவரை அவரின் குர்து இன மனைவியை விவாகரத்து செய்யுமாறு தீவிரவாதிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications