பாய்ந்த 5000 ஏவுகணைகள்.. பாலஸ்தீனத்தை எதிர்த்து இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரான்ஸ் அதிபர்! என்ன சொன்னார்?
இஸ்ரேல்: இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையில் பல்வேறு மோதல் சம்பவங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றிருக்கின்றன. இந்நிலையில் தற்போது இந்த மோதல்கள் உச்சமடைந்துள்ளன. இன்று காலை இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மட்டுமல்லாது இஸ்ரேலுடன் துணை நிற்பதாகவும் அறிவித்துள்ளார்.
உலகின் எல்லா நாடுகளுக்கும் வரலாறு இருப்பதை போல இஸ்ரேலுக்கும் ஒரு தனி வரலாறு இருக்கிறது. யூத இனத்தை சேர்ந்த தியோடர் ஹெஸில் என்பர்தான் ஜியோனிஸம் எனும் சித்தாந்ததை உருவாக்கியவர். இதன் நோக்கம் யூத மக்களுக்கு என ஒரு தனி நாடு வேண்டும் என்பதுதான். இதற்காக அவர் பாலஸ்தீனத்தை தேர்ந்தெடுத்து அப்போதைய அரபு நாட்டின் ஆட்சியளர்களிடம் இது தொடர்பான விருப்பத்தை கூறினார். ஆனால், அவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இப்படியே காலங்கள் செல்ல, இவருக்கு பின் வந்தவர்கள் இதே கோரிக்கையை முன் வைக்க, பிரிட்டன் இந்த கோரிக்கையை ஏற்று யூதர்களை பாலஸ்தீனத்தில் குடியமர்த்த ஏற்பாடு செய்கிறது. பிரிட்டனின் இந்த வழிமுறையை ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக்கொள்ள, அரபு நாடுகள் மறுதலித்தன. ஆனால் பிரிட்டனிடம் இருந்த படைகள் வலுவாக இருந்ததால் அப்போதைக்கு சிறு சிறு எதிர்ப்புகளோடு இந்த பிரச்னைகள் முடிவுக்கு வந்துவிட்டன. ஆனால் பிரிட்டன் படைகள் அங்கிருந்து வெளியேறிய பின்னர் இஸ்ரேலுக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக 1947ம் ஆண்டு ஐநா பாலஸ்தீனத்தை மூன்றாக பிரித்தது. இங்குதான் பஞ்சாயத்து மீண்டும் வெடித்து கிளம்பியது.
அதாவது, பாலஸ்தீனத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 56% யூதர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கு வசிக்கும் மொத்த மக்கள் தொகையில் யூதர்களின் எண்ணிக்கை அப்போது வெறும் 30%தான். இதே 70% என பெரும்பான்மையாக வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு 43% நிலப்பரப்புதான் ஒதுக்கப்பட்டது. ஏற்கெனவே எங்கள் மண்ணில் ஆக்கிரமிப்பு செய்துவிட்டீர்கள், இப்போது பாக பிரிவினையிலும் ஒருதலைபட்சமா? என கேள்வியெழுப்பி பாலஸ்தீனம் சண்டை செய்ய தொடங்கிவிட்டது.
இந்த பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இங்கு சுயாட்சியை நடத்தி வருகிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தியிருக்கிறது. எனவே கடந்த காலங்களில் இதற்கு எதிரான தாக்குதலில் தீவிரமாக இறங்கியிருந்தது. இந்த பின்னணியில்தான் இன்று காலை இந்த அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை தொடுத்திருந்தது.
ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ராக்கெட்களை ஏவி இஸ்ரேலை ஹமாஸ் போராளிகள் நிலைக்குலைய செய்துள்ளனர். மட்டுமல்லாது இந்த போராளிகள் தங்கள் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளதாகவும் இஸ்ரேல் விமர்சித்துள்ளது. இதனையடுத்து இஸ்ரேல் போர் நிலையை அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான், "இஸ்ரேலைத் தாக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications