இதய மாற்று சிகிச்சைக்காக வந்த ஏழை நோயாளி.. தத்தெடுத்த நர்ஸ்.. ஜார்ஜியாவில் நெகிழ்ச்சி!
ஜியார்ஜியா : இதய மாற்று சிகிச்சைக்காக வந்த ஆதரவற்ற நோயாளி இளைஞரை அந்த மருத்துவமனையின் செவிலியர் தன்னுடைய மகனாக தத்தெடுத்த நெகிழ்ச்சி சம்பவம் ஜியார்ஜியாவில் நடைபெற்றுள்ளது.
ஜோனாதன் பின்கார்டு என்ற அந்த 27 வயது இளைஞர், வீடில்லாமல் மறுவாழ்வு மையத்தில் வசித்து வந்தது மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிறகு கவனிப்பதற்கு ஆளில்லாத காரணங்களால் அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவருடைய நிலையை கருத்தில் கொண்டு, அந்த மருத்துவமனையில் பணிபுரியும் லாரி வுட் என்ற செவிலியர் அவரை தன்னுடைய மகனாக தத்தெடுத்துக் கொண்டார். மேலும் தன்னுடைய மகன்களில் ஒருவராக அவரை தன்னுடைய வீட்டிலேயே பரிவுடன் பாதுகாத்து வருகிறார்.

விண்ணப்பம் மறுப்பு
இதய மாற்று செய்ய வேண்டிய நிலை மற்றும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஜோனாதன் இதய மாற்று சிகிச்சைக்காக பதிவு செய்துவிட்டு காத்திருந்த நிலையில், அறுவை சிகிச்சைக்கு பின்பு அவரை கவனிக்க யாரும் இல்லாத காரணத்தால் அவரது விண்ணப்பம் ஏற்கப்படாமல் இருந்தது.

நோயாளி நெகிழ்ச்சி
இந்நிலையில், கடந்த டிசம்பரில் இரண்டு நாட்கள் அவரை கவனித்துக் கொள்ள லாரி வுட் என்ற நர்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது அவரது நிலையை கண்டு மனம் துடித்த லாரி, அவரை தன்னுடைய மகனாக தத்தெடுத்துக் கொள்ள தீர்மானித்து, தன்னுடைய மகன்களிடமும் ஆலோசித்து அவரை தன்னுடைய வீட்டிற்கே அழைத்து சென்று விட்டார்.

ஜோனாதன் பின்கார்டு நெகிழ்ச்சி
இரண்டு நாட்கள் என்னை கவனித்துக் கொண்ட லாரி வுட், இத்தகைய முடிவை எடுப்பார் என்று என்னால் நம்பவே முடியவில்லை. இது எல்லாமே ஒரு கனவு போல உள்ளது என்று ஜோனாதன் பின்கார்டு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். எனக்கு அம்மா கிடைத்துவிட்டார் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

உடனடியாக வீட்டிற்கு அழைப்பு
ஜோனாதனை கண்டபோது அவனது சிகிச்சை குறித்து அறிந்தபோது, ஹோகன்ஸ்வில்லேவில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு உடடினயாக லாரி வுட் அவனை அழைத்து சென்றுவிட்டார். கடவுள் தன்னை இந்த செயலை செய்யத் தூண்டியதாக லாரி வுட் தெரிவித்துள்ளார். தன்னுடைய வீட்டில் ஒரு அறையை ஒதுக்கித் தந்ததை தவிர வேறு எந்த பெரிய செயலையும் தான் செய்துவிடவில்லை என்று அவர் தன்னடக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

ஒட்டுதலுடன் பழகும் ஜோனாதன்
கடந்த ஜனவரியில் இருந்து ஒரே வீட்டில் வசித்துவரும் இவர்கள் இருவரும், உண்மையான தாய், மகனைப் போல மிகுந்த ஒட்டுதலுடன் பழகி வருகின்றனர். பல்வேறு வகையிலும் ஜோனாதன் ஒத்துழைப்புடன் இருந்து வருவதாக லாரி வுட் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மிகுந்த பரிவுடன் கவனிப்பு
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜோனாதனின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், தனக்கு மறுவாழ்வும் மற்றொரு தாயும் கிடைத்துள்ளதாக ஜோனாதன் மகிழ்ச்சி தெரிவிக்கிறார். இதேபோல, ஜோனாதனுக்கு சிறந்த வாழ்க்கையை உருவாக்கித் தர வேண்டும் என்று லாரி வுட்டும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications