ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்து வெளியே தூக்கி வீசப்பட்ட 13 வயது சிறுமி பலி : தாய்லாந்தில் பயங்கரம்
பாங்காக்: ஓடும் ரயிலில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வெளியே வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தாய்லாந்து நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் தெற்கு மாகாணங்களில் ஒன்றான சுரட் தனி-யில் நோய்வாய்பட்டிருக்கும் பாட்டியை பார்த்து விட்டு கடந்த சனிக்கிழமையன்று ரயிலில் தலைநகர் பாங்காக்கிற்குத் திரும்பிக் கொண்டிருந்தது ஒரு குடும்பம். அதில் 13 வயது சிறுமியும் ஒருவர் இருந்தார்.
இரவு தூங்கிக் கொண்டிருந்த அந்த சிறுமியை மர்ம நபர்கள் தூக்கிச் சென்றுள்ளனர். காலையில் கண் விழித்து பார்த்த குடும்பத்தார் சிறுமி மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக போலீசில் அவர்கள் புகார் அளித்தனர்.
இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை கிரிகான் மாகாணம், ப்ரன்புரி மாவட்டத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் உடல் முழுக்க காயங்களுடன் ஒரு சிறுமியின் சடலம் கிடப்பதாக போலிசாருக்குத் தகவல் கிடைத்தது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அச்சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.
இச்சம்பவம் தொடர்பாக ரெயில்வே ஊழியர் ஒருவரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவம் தாய்லாந்து மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில் இதைப்போன்ற சம்பவங்கள் நடைபெறாவண்ணம் தடுக்க, இக்குற்றத்திற்கு கடுமையான தண்டனையை கொண்டு வர வேண்டும் என்று அரசை வலியுறுத்தி ஒரே நாளில் ‘ஆன்லைன்' போராட்டத்தில் 15 ஆயிரம் கையொப்பங்கள் குவிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.