இனியும் தாமதிக்க நேரமில்லை... தடுப்பூசிகள் மூலம் 5 கோடி பேரை காப்பாற்றலாம்.. உலக சுகாதார மையம்
ஜெனீவா: சர்வதேச அளவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்துவதன் மூலம் ஐந்து கோடி பேரின் உயிர்களைக் காக்க முடியும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகமே இன்னும் கொரோனா பெருந்தொற்றின் கொடிய பிடியிலிருந்து மீளவில்லை. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனாவுக்கு மட்டுமே உலக நாடுகள் அதிகம் முக்கியத்துவம் அளித்து வருவதால் அம்மை, மஞ்சள் காய்ச்சல் போன்ற கொடிய நோய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அம்மை, மஞ்சள் காய்ச்சல் போன்ற பல உயிருக்கு ஆபத்தான நோய்களை நாம் தவிர்க்க வேண்டுமானால், ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா தவிர மற்ற வழக்கமான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும், இதன் மூலம் 2030 வரை ஐந்து கோடி பேரைக் காக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ளும் GAVI அமைப்பின் தலைவர் கூறுகையில், ஏற்கனவே இந்த கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல கோடி குழந்தைகளுக்கு அடிப்படை தடுப்பூசிகள்கூட செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பெருந்தொற்று நாம் கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொண்ட பணிகளை ஆபத்தில் தள்ளியுள்ளது. இனி நமக்குத் தாமதிக்க நேரமில்லை. இன்னும் தாமதம் அதிகமானால் உயிரிழப்புகளும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications