கன்னடர்கள் சட்டவிரோத பேர்வழிகள்.. சொல்வது கோவா நீர்வளத்துறை அமைச்சர்
பானாஜி: கன்னடர்கள் சட்டவிரோத பேர்வழிகள் என கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார் கோவா மாநில நீர்வளத்துறை அமைச்சர் வினோத் பலின்கார்.
கர்நாடகா-கோவா நடுவே மகதாயி நதி நீர் பிரச்சினை உள்ளது. கர்நாடக மாநிலம் பெல்காமில் உற்பத்தியாகி, அந்த நிதி, கோவா வழியாக பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது.
காவிரி நதிநீர் விவகாரம் போலவே இந்த நதிநீர் விவகாரத்திலும் இரு மாநிலங்கள் நடுவே பிரச்சினை உள்ளது.
சட்டவிரோதம்
இந்த விவகாரம் நீதிமன்றம் மற்றும் நடுவர்மன்றங்களில் விசாரிக்கப்படும் நிலையில், கன்கும்பி என்ற வட கர்நாடக பகுதியில், மகதாயி நதியை கர்நாடகா நைசாக திசை திருப்பிவிட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த கோவா அமைச்சர் வினோத் பலின்கார் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினார். இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய அவர், அண்டை மாநிலமான கர்நாடகா, அசிங்கமான அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார். கன்னடர்கள், சட்டவிரோத பேர்வழிகள் என அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
ஆத்திரத்தில் சொன்னாரம்
இருப்பினும், சற்று நேரத்திற்கு பிறகு நிருபர்களை சந்தித்த வினோத், தான் கன்னடர்கள் குறித்து கூறிய வார்த்தைகள் ஆத்திரத்தில் வந்தவை என்பதால் அதை பெரிதுபடுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்குள் அந்த வார்த்தை கன்னட டிவி சேனல்களில் பிரேக்கிங் செய்தியாக மாறி சர்ச்சையை கிளப்பி விட்டிருந்தது.
கன்னட அமைப்புகள்
மேலும் அவர் கூறுகையில், இதுபற்றி கோவா முதல்வரிடம் பேசியுள்ளதாகவும், இந்த கட்டுமானத்தை தடுத்து நிறுத்த கோவா மாவட்ட கலெக்டர், பெல்காம் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார். இதனிடையே மகதாயி பிரச்சினைக்காக ஜனவரி 25ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன.
தர்ம சங்கடத்தில் பாஜக
தேர்தல் பிரசாரம் கர்நாடகாவில் சூடு பிடித்துள்ளது. ஜனவரி 28ம் தேதி பெங்களூருக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார். அப்போது அவருக்கு கருப்பு கொடி காட்டுவோம் என்றும் கன்னட அமைப்பினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். கோவாவில் பாஜக ஆட்சி நடக்கிறது என்பதால் பாஜகவுக்கு இப்போது தர்ம சங்கட சூழல் உருவாகியுள்ளது.