சோமாலியா பீச் ரெஸ்டாரண்டில் குண்டுவெடிப்பு - தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை
மொகதிஷு: ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தலைநகர் மொகதிஷுவில் உள்ள பீச் ரெஸ்டாரண்ட் ஒன்றில் தீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சோமாலியத் தலைநகரான மொகடீசுவில் உள்ள கடற்கரை உணவகம் ஒன்றின் அருகே பயங்கர வெடிகுண்டு வெடித்தது. இதனைத் தொடர்ந்து உணவகம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இதற்கு சோமாலிய பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
அல்-கொய்தாவின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பான அல்-ஷபாப்புக்கு இந்தத் தாக்குதலில் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கெனவே, கடந்த ஜூலை 26ஆம் தேதி அல் ஷபாப் தீவிரவாதிகள் சோமாலியத் தலைநகரில் உள்ள விமான நிலையத்தில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சோமாலியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்று வரும் ஆட்சியை கலைக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற தாக்குதலில் அல்-ஷபாப் அமைப்பையினர் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.