காஷ்மீர் வெள்ளத்துக்கு இந்தியாதான் காரணமாம்.. சொல்கிறார் லஷ்கர் இ தொய்பா ஹபீஸ் சயீத்
இஸ்லாமாபாத்: காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டிருப்பதற்கு இந்தியாதான் காரணம் என்று லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் (இப்போது இதன் பெயர் ஜமாத் உத் தவா) தலைவரான ஹபீஸ் சயீத் கூறியுள்ளார்.
மும்பை பயங்கரவாத வழக்கு உள்பட பல்வேறு வழக்குளில் இந்தியாவின் வான்ட்டட் லிஸ்ட்டில் இருப்பவர் சயீத். பாகிஸ்தானில் பாதுகாப்பாக நடமாடி வருகிறார் சயீத்.
இந்த நிலையில், காஷ்மீர் வெள்ளத்தால் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இந்தியாவைக் குற்றம் சாட்டியுள்ளார் இந்த சயீத்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
இந்திய ஆட்சியாளர்களின் கொடுமை
இந்திய ஆட்சியாளர்கள் காஷ்மீரில் செய்து வரும் கொடுமைகளை பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
பாகிஸ்தான் ஆற்றில் அணை கட்டும் இந்தியா
பாகிஸ்தானுக்குச் சொந்தமான ஆறுகளில் இந்தியா அணைகளைக் கட்டுகிறது. இதை பாகிஸ்தான் தடுக்காமல் வேடிக்ைக பார்க்கிறது.
இந்தியா திறந்து விட்ட தண்ணீர்
தற்போது கூட பாகிஸ்தான் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட, இந்தியர்கள் தங்களது பகுதியிலிருந்து பாகிஸ்தான் ஆறுகளில் வெள்ள நீரை திருப்பி விட்டதே காரணம்.
இதுக்காகத்தான் நான் போராடுகிறேன்
இந்தியர்கள் அணை கட்டுவதை பாகிஸ்தான் தடுக்க வேண்டும். இந்த காரணத்திற்காகவே ஜம்மு காஷ்மீர் இந்தியாவிடமிருந்து விடுவிக்கப்பட வேண்டும். இதற்காகவே நான் போராடி வருகிறேன்.
காஷ்மீரை விடுவித்தால் பாகிஸ்தான் தப்பும்
இப்போது நம்முன் உள்ள ஒரே வழி காஷ்மீரை விடுவித்து பாகிஸ்தானை காப்பாற்றுவது மட்டுமே.
ஆப்கன் நதிகளையும் கூட இந்தியா விடவில்லை
தற்போது செனாப், ஜீலம், நீலம் நதிகளில் அணைகளைக் கட்டி வரும் இந்தியா, ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் நதிகளையும் கூட விடவில்லை. மேலும் இந்து நதியின் தண்ணீரைத் தடுக்கும் வகையில், கார்கில் பகுதியில் உலகின் 2வது மிகப் பெரிய அணையையும் கட்டி வருகிறது. இந்த அணை வந்தால் பாகிஸ்தான் மூழ்கிப் போய் விடும் என்றார் சயீத்.